அத்தியாயம் 11
விக்னேஷ் எல்லா வேலைகளுக்கும் தம்பியையே நம்பிக் கொண்டிருப்பதை உணர்ந்தவன்,ஷங்கரின் யோசனைப்படி ஏதாவது வேலைக்காரர்களை வீட்டில் வைத்துக்கொள்ளலாமா என்று யோசித்தபடி அமர்ந்திருக்க..
“என்னண்ணா..ரொம்ப தீவிரமா யோசிச்சிட்டு இருக்க?”கேட்டபடி,இரவுக்கான மாத்திரையை எடுத்துக் கொடுத்தான்.
“நீ நாளைக்கு ஊருக்கு போயிடுவ..!தனியா எப்படி எல்லாத்தையும் மேனேஜ் பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்..”எனவும்,
“சாரிண்ணா..என்னால போகாம இருக்க முடியாது.இப்போவே காய்ச்சல்னு பொய் சொல்லி தான் லீவ் எடுத்திருக்கேன்.இதுக்கு மேலையும் லீவ் எடுத்தா..என்னோட வேலையே போயிடும்.அப்புறம் ஒருத்தணும் பொண்ணு கொடுக்க மாட்டானுங்க”கவலையோடு பேச..
“என் பிரண்டோட தங்கச்சி ஒருத்தி இருக்கா..நல்ல பொண்ணு தான்..கல்யாணம் பண்ணிக்கறியா..பேசிப் பார்க்கட்டுமா?”கேட்கவும்,
‘உன் பிரண்ட் எப்படி நல்லவனா இருப்பான்..அவன் தங்கச்சி நல்லா,அழகா இருந்திருந்தா..இந்நேரம் நீ கரெக்ட் பண்ணாமலா விட்டிருப்ப’மனதிற்குள்ளேயே நினைத்தவன்,
“உனக்கு எதுக்கு சிரமம்-ண்ணா..நம்ம சொந்தத்திலையே ஏதாவது பொண்ணு இருக்கும்..ஊருக்கு போனா..அம்மா போட்டோ காட்டுவாங்க..சொந்தத்துல இருக்க பொண்ணை ஓகே பண்ணா..அம்மா,அப்பாவை நல்லா பார்த்துக்குவா..எனக்கும் உதவியா இருப்பா”அப்பாவியாய் பேசவும்,
“அழகான பொண்ணுடா”மீண்டும் ஆசை காட்டினான்.
“அழகு முக்கியம் இல்லண்ணா..குணம் தான் முக்கியம்...நீ வீட்டு வேலைக்கு முதல்ல ஆளை தேடு”என்றவன்,அண்ணன் அருகிலையே படுத்துக்கொள்ள..விக்னேஷும் இதற்கு மேல்,தம்பியை தாங்க முடியாது என்று அமைதியாய் படுத்துவிட்டான்.
அவர்கள் இருவரின் மூச்சு சீரான சிறிது நேரத்திலையே...அந்த வீட்டில் விசித்திரமான சத்தங்கள் கேட்க..ஷங்கர் உடனேயே கண் விழித்துவிட்டான்.
தூக்கத்தில்..கனவில் தான் எழுந்திருந்திருக்கிறோமோ என்ற சந்தேகத்தில்,தன் கையை ஒருமுறை கில்லியும் பார்த்தான்..கை வலிக்கவுமே..ஷங்கருக்கு பயம் பிடித்துக் கொண்டது.
என்ன சத்தம் என்று எழுந்து சென்று பார்க்க,பயமாக இருந்ததால்..அண்ணனை எழுப்பினான்.
அவனோ தூக்கத்தில் கனவு கண்டு,பயந்து தான் எழுப்புகிறான் என்று நினைத்துக் கொண்டவன்,”பேசாம படுடா..ரொம்ப டார்ச்சர் பண்ண,வெளில உன்னை தூக்கிப்போட்டுட்டு கதவை சாத்திக்குவேன்”என்று மிரட்டிவிட்டு படுத்துக் கொண்டான்.
“நிஜமாவே வெளில ஏதோ சத்தம் கேட்குதுண்ணா..வா..என்னன்னு பார்க்கலாம்”என்று அழைக்க,
“உன்னோட தொந்தரவு தாங்க முடியலடா..வா..பார்க்கலாம்”என்று மெதுவாக எழுந்துகொள்ள..
ஷங்கரின் அருகில்..’நீ தப்பு பண்ண பார்க்கற..தனியா வெளில வா’என்று கேட்கவும்,
“அண்ணா..யாரோ என்னை மட்டும் தனியா வான்னு கூப்பிடறாங்க-ண்ணா.இந்த வீட்டுல ஏதோ இருக்கு...எனக்கு பயமா இருக்கு”என்று அண்ணனின் தோளை இறுகப் பிடித்துக்கொள்ள,விக்னேஷிற்கு தோள்பட்டை பயங்கரமாக வலிக்க ஆரம்பித்துவிட்டது.
“எனக்கு வலிக்குதுடா..உனக்கு பயமா இருக்குதுன்னு,என்னை கொன்னுடாதே”என்றவன்,
“இவ்வளவு சொல்ற..வா..என்னன்னு பார்ப்போம்”கையோடு ஷங்கரையும் கூட்டிக்கொண்டு கதவை திறந்து,ஹாலிற்கு வந்தான்.
அங்கே யாரையும் காணவில்லை.
எந்த சத்தமும் விக்னேஷிற்கு கேட்காதும் போக,”ஒண்ணுமே இல்லையேடா..”எனும் போதே..
ஷங்கருக்கு மட்டும்,”உன்கிட்ட சொல்றதுக்கு நிறைய இருக்கு.தனியா வா..அவன்கிட்ட சொல்லாம,தனியா வெளில வா’என்று சாந்தமாக ஆரம்பித்து,கோபமாக முடிக்க...ஷங்கருக்கு பயத்தில் உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்துவிட்டது.
தம்பியின் கையை பிடித்திருந்த விக்னேஷால்,அவன் கையின் ஈரத்தை உணர முடிய..”ஏன்டா,இப்படி எதுவும் இல்லாததுக்கு எல்லாம் பயந்து தொலையற...இங்க எதுவும் இல்லடா...”என்று சமாதானம் செய்தான்.
“எதுவோ இருக்குண்ணா..உனக்கு அந்த குரல் கேட்கல..எனக்கு மட்டும் கேட்குது..அப்போ என்னை ஏதோ செய்யப் போகுது தானே...”என்றவன்,
“அண்ணா...என்னை இப்பவே ஏதாவது டாக்சி பிடிச்சு கூடவே வந்து,பஸ் ஏத்திவிட்டுடு..ப்ளீஸ்-ண்ணா”பயத்தில் கெஞ்சவும்,
“இந்த நேரத்துல,எந்த டாக்சிடா கிடைக்கும்..இன்னைக்கு நைட் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்க..காலைல நீ முதல் பஸ்-கே போயிடு.நான் உன்னை தடுக்க மாட்டேன்”என்றவன்,
சந்தேகமாய்,”உன்னை இங்க இருக்க சொல்றேன்னு தான்,இப்படி ஏதோ குரல் கேட்குதுன்னு டிராமா பண்றியா”கேட்கவும்,
“என்னைப் பார்த்தா,உனக்கு டிராமா பண்ற மாதிரியா இருக்கு?”என்றவனுக்கு பயத்தில் அழுகையே வரும் போலிருந்தது.
சிறுவயதிலிருந்து பார்த்த பேய் படங்கள்,கேட்ட கதைகள் யாவும்,அவன் கண் முன்னே உலாப் போக...மீண்டும் அந்த குரல் கேட்கிறதா என்று கவனமாய் கேட்கவும்,’நான் பேசறது உனக்கு மட்டும் தான் கேட்கும்..உன்னோட அண்ணனுக்கும் கேட்கணுமா’எனவும்,
பயம் மிகுதியில்”அவனுக்கும் கேட்கிற மாதிரியே பேசு..அப்போ தான் நம்புவான்”எனவும்,விக்னேஷ்..தம்பியை எரிச்சலாக பார்த்தான்..
ஷங்கர் அண்ணனை கவனிக்காமல்..அந்த குரலின் மேல் கவனத்தை வைக்க...”அவனுக்கு நான் பேசறது கேட்காது...கேட்கணும்னா....உனக்குள்ள நான் வரணும்...அப்போ தான்,என்னை அவனுக்கு உணர வைக்க முடியும்”என்றதும்,ஷங்கருக்கு புரிந்துவிட்டது.
தன் உடம்பில் ஆவி புக பார்க்கிறது..அதை ஏதோ தடுக்கிறது..அதனால் தான் தன்னிடம் நல்லபிள்ளை போல் பேச்சு வார்த்தை நடத்துகிறது என்று புரிந்துகொண்டவன்,”அவனுக்கு உன் பேச்சு கேட்கவே வேண்டாம்..”என்றவன்,
“வா-ண்ணா..உள்ள போகலாம்”என்று அறைக்குள் அழைத்து சென்றவன்,படுக்கையில் விழுந்து,போர்வையால் தன்னை இறுக போர்த்திக் கொண்டான்.
“லூசாடா நீ”விக்னேஷ் கத்திக் கொண்டேயிருக்க..
போர்வையை விலக்கியவன்,”இன்னும் ஒருநாள் இங்க இருந்தேன்னா..லூசாவே ஆகிடுவேன்..இன்னைக்கு பொழுதை எப்படியாவது கடத்திடணும்”என்றவன்...திடீரென்று எழுந்து,கபோர்ட் பக்கம் எதையோ தேடினான்.
“என்ன தேடறடா”எரிச்சலோடு கேட்க..
“காதுல வைக்க பஞ்சு தேடறேன்டா..இங்க தான் எங்கேயோ வைச்சேன்”என்று ஷங்கர் பேசப்பேச..அந்த குரல் சிரிப்பது நன்றாக தெரிந்தது.
விக்னேஷ் பேசுவது கூட கேட்காத அளவிற்கு காதில் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டு,மீண்டும் போர்வையை போர்த்திப் படுக்க..விக்னேஷ் இரவு விளக்கை ஒளிரவிட்டு படுத்துக்கொள்ளவும்...மெல்ல போர்வையை விலக்கிப் பார்த்தான் ஷங்கர்.
சுவற்றில் சாய்ந்து..ஸ்டைலாக நின்று கொண்டிருந்த ஆண் உருவம் தெரிய...வாய் திறந்து கத்தக் கூட முடியாமல்,பயத்தில் அப்படியே மயங்கிவிட்டான்.
மறுநாள் காலையில் கண் விழித்தவன்...மணி ஆறாவதை உணர்ந்து,காதிலிருந்த பஞ்சை எடுத்துவிட்டு,குளிக்கக் கூட செய்யாமல்,ஊருக்கு புறப்பட்டுவிட்டான்.
விக்னேஷ் எவ்வளவோ முயற்சி செய்தும்,ஷங்கர் அங்கே இருக்க சம்மதிக்கவில்லை.
“இந்த வீட்டுல என்னமோ இருக்கு..நீ இந்த வீட்டை காலி பண்ணிட்டு போயிடு..என்னையும் எந்த காரணத்துக்காகவும் கூப்பிடாத..!இனி எக்காரணத்தைக் கொண்டும்,இந்த வீட்டுப்பக்கம் வர மாட்டேன்”என்றவன்,கிளம்பி போய்விட்டான்.
‘இனி வேலைக்காரவங்களை வச்சுக்கிட்டாலும்,இவன மாதிரி அக்கறையா யார் பார்த்துப்பா’விக்னேஷின் மனதில் கவலைகள் தோன்றினாலும்..
‘யாருமில்லாமலும் என்னால வாழ முடியும்’உடனே மனதை திடப்படுத்திக் கொண்டான்.
பத்து மணிக்கெல்லாம் வீட்டையடைந்துவிட்ட ஷங்கர்..அம்மாவை பார்த்ததும்,”சூடா டீ போட்டுக் கொண்டு வாம்மா”என்றான்.
அவர் உடனே போட்டுக் கொண்டு வந்து கொடுத்தவர்,”முகமெல்லாம் கருத்துப் போனாப்ல இருக்கு..ரொம்ப வேலையா?”கேட்கவும்,
“ஆமாம்மா..”எனவும்,செல்பில் இருந்த போட்டோவை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார்.
“இதுல ரெண்டு பொண்ணுங்க போட்டோ இருக்கு ஷங்கர்.உனக்கு பிடிச்ச பொண்ணா சொல்லு...”எனவும்,போட்டோவை வாங்கிப் பார்த்தவன்,
“ஒரு ரெண்டு மாசம் கழிச்சு பார்த்துக்கலாம்மா..இப்போ ரொம்ப முக்கியமான வேலைகள் எல்லாம் இருக்கு”என்றவன்,கல்லூரிக்கு புறப்பட்டு சென்றுவிட்டான்.
அவனது பாடவேளைக்கு சரியாக வந்துவிட்டவன்...வகுப்பு முடிந்ததும்,ஓய்வாக தனது இருக்கையில் வந்து அமர்ந்தான்.
விஷ்வா..ஷங்கரை அப்போது தான் பார்த்தவன்,”எப்போடா வந்த?”வந்து விசாரிக்க..
“ஒரு மணி நேரம் ஆச்சு விஷ்வா..லேசா தலைவலிக்குது..டீ சாப்ட்டு வரலாமா?”கேட்கவும்,
“ம்ம்..”என்று அவனோடு சென்றான்.
இருவரும் டீ வாங்கிக்கொண்டு வந்து அமர...”அண்ணனுக்கு எப்படி இருக்கு ஷங்கர்”விசாரிக்கவும்,
“நல்லா இருக்கான் விஷ்வா..கூடவே இருக்க சொன்னான்..என்னால முடியாதுன்னு வந்துட்டேன்”எனவும்,
ஆச்சர்யப்பட்ட விஷ்வா,”உனக்கு தான்,உன்னோட அண்ணன் மாதிரி இருக்கணும்னு ஆசையே..அப்போ ஏன் வந்துட்ட?”ஷங்கரின் மனநிலையை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்க..
“எனக்கு அந்த சூழ்நிலை சரியா வரும்னு தோணலை விஷ்வா..பின்னாடி பார்த்துக்கலாம்னு வந்துட்டேன்..அதை விடு..நம்ம காலேஜ்ல வேற ஏதாவது இன்ட்ரஸ்டிங் நியூஸ் ஏதாவது நடந்துச்சா?”விசாரிக்க..
“அப்படி எதுவும் இல்லப்பா..?”எனவும்,
“நான் பைக் நிறுத்தற இடத்துல,புதுசா ஒரு பைக் இருந்துச்சே..யாரோடது..?”என்று கேட்டான்.
அவனது டிபார்மென்ட் ஆட்கள் பார்க் செய்யக் கூடிய இடமது...வேறு பேராசியர் யாராவது வாங்கியிருக்கக் கூடும் என்று ஷங்கர் விசாரிக்க...”என்னோடது தான் ஷங்கர்”என்றான்.
“பைக் ஓட்டக் கூடாதுன்னு சொன்ன?”ஆச்சர்யமாக கேட்க..
“டாக்டர் பேச்சை கேட்டா..சீக்கிரமா குணமாகிடுவோமே...!அதான் கேட்க வேண்டாம்னு முடிவு பண்ணி,பைக் வாங்கியாச்சு”கேலியாக கூற..
“ம்ம்..இதுவும் சரி தான்..எத்தனை நாளைக்கு,உன்னோட அண்ணனையும்,அண்ணியையுமே நம்பியிருப்ப..!இனி நீ எப்போ வேணா வரலாம்..எப்போ வேணா போகலாம்..”என்றவன்,
“இன்னைக்கு படத்துக்கு போகலாமா?”திடீரென்று கேட்க..
“உனக்கு பிடிச்சவங்க படம் ரிலீஸ் ஆகியிருக்கா?”ஆச்சர்யமாக கேட்டான்.
“புது பைக் வாங்கியிருக்கியே..அதை கொண்டாட வேண்டாமா? அதுக்கு தான்..இன்னைக்கு செலவு எல்லாம் உன்னோடது தான்”எனவும்,
“சரி”என்று ஒத்துக்கொண்டான் விஷ்வா..
மாலை வகுப்பு முடிந்ததும்,இருவரும் ஆறு மணி ஷோவிற்கு செல்ல..அதை விஷ்வா,அண்ணனிடம் கூறவும்..”சரிடா..இருட்டுல பார்த்து,பைக் ஓட்டிட்டு வா..”எனவும்,
“நான் பார்த்துக்கறேன்..ராதிகாவுக்கு இப்போ உடம்பு எப்படியிருக்கு?”என்று கேட்டான்.
“காய்ச்சல் பரவாயில்லை..குறைஞ்சிருக்கு..நீ தனியா பைக்கை எடுத்துட்டு போனதை நினைச்சு தான்,பயந்துட்டு இருக்கா..நீ பார்த்து,நிதானமா பைக்கை ஓட்டிட்டு வா”என்று திரும்ப திரும்ப அறிவுரை கூற..
“சரி”என்று போனை வைத்துவிட்டான்.
“வீட்டுல யாருக்கு உடம்பு சரியில்லை?”ஷங்கர் விசாரிக்கவும்,
“அண்ணிக்கு தான் உடம்பு சரியில்லை ஷங்கர்.ரெண்டு நாளா ஹை பீவர் இருக்கு.அண்ணன் கூட இருந்து கவனிச்சுக்கறான்..அதான் வேற வழியேயில்லாம,நான் பைக்கை எடுத்துட்டு வந்துட்டேன்.இல்லைன்னா வீட்டுலயும் பைக்கை எடுக்க விட்டிருக்க மாட்டாங்க”என்றவன்,
“படம் போட்டாச்சு போல..வா போகலாம்”என்று அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.
தியேட்டரில் பெரிதளவில் கூட்டமில்லை.
“எனக்கு தியேட்டர்ல கூட்டமா இருந்தா தான் பிடிக்கும் விஷ்வா..விசில் சத்தத்துக்கு நடுவில படம் பார்க்கறது,வேற லெவல் சந்தோஷம் தான்...இனிப் போகப்போக,தியேட்டர்ல படம் வர்றதும் குறைஞ்சிடும் போல..! எவ்வளவு நாளைக்கு நஷ்டத்துலையே ஓட்ட முடியும்”பேசியபடியே சீட் பார்த்து அமர்ந்தான்.
படமும் அவ்வளவு சுவாரசியமாக இல்லை..இருவரும் வேண்டா வெறுப்பாக படம் பார்த்துவிட்டு வெளிய வந்து..இரவுணவை முடித்துக் கொண்டார்கள்.
விஷ்வா,ஷங்கரிடம் கூறிவிட்டு புறப்பட..”எப்போ எங்க வீட்டுக்கு வரப்போற”என்று கேட்டான்.
“ஒரு மாசம் கழிச்சு தான் வீடு மாற முடியுமாம் ஷங்கர்..அண்ணா ரெண்டு மைன்ட்செட்ல இருக்கான்..அதனால என்னால எதையும் உறுதியா சொல்ல முடியாது”எனவும்,
“நீ மட்டும் ஒரே மைன்ட் செட்லையே இருக்கியா?”என்று கேட்க..விஷ்வா அவன் பேசிய விஷம் வித்தியாசமாக இருக்க..
“புரியல”என்றான்.
“இல்ல நீ மட்டும் ஒரே மனநிலையில இருக்கியான்னு கேட்டேன்..”
“ஏன் அப்படி கேட்கிற”புரியாது விஷ்வா கேட்க..
“இல்ல..நந்தினி விஷயத்துல,இன்னும் நீ அதே மைன்ட்செட்ல இருக்கியான்னு கேட்டேன்”எனவும் தான்,நிம்மதியானான் விஷ்வா..
“நான் அன்னைக்கே சொன்னேனே..மேடமோட ஸ்டேட்டஸ்-க்கு வேற யாராவது நல்ல பையன் கிடைப்பாங்க..என்னோட சேர்த்து வைச்சுப் பேசறதே,அவங்களுக்கு கவுரவ குறைச்சல் தான்”என்று பேச்சை முடித்துக் கொண்டவன்,
“சரி..கிளம்பறேன்டா”என்று புறப்பட்டான்.
வீட்டிற்கு வந்த விஷ்வா..ராதிகாவை நேராக வந்து பார்த்தவன்,”காய்ச்சல் எப்படி இருக்கு”என்று கேட்டான்.
“இப்போ பரவாயில்லை”எனவும்,
“சாப்பிட்டிங்களா..இல்ல ஏதாவது செஞ்சு தரட்டுமா?”என்று கேட்க..
பிரதாப்..”நாங்களும் சாப்டாச்சு விஷ்வா..மீனாக்ஷி மேடம்,அவங்க வீட்டுல இருந்தே,கொண்டு வந்து கொடுத்துட்டு போனாங்க”எனவும்,
“அவங்க மட்டும் கொண்டு வந்து கொடுத்தாங்களா?”சந்தேகமாக கேட்க..
“நந்தினியும் வந்திருந்தாங்க..ராதிகாவை விசாரிச்சுட்டு,வீட்டு வேலையாட்கள் கிட்ட கொடுத்து விட்டாங்க..எவ்வளவோ மறுத்தும் கேட்கலை...”என்றான்.
“ம்ம்..இனி அவங்க கொடுத்தாலும் வாங்க வேண்டாம்..நாளையிலிருந்து சீக்கிரமாவே வந்துடறேன்.இன்னைக்கு ஷங்கரை அவாய்ட் பண்ண முடியல..”என்றவன்,
“இன்னைக்கு என்னவோ அவன் ரொம்ப வித்தியாசமா இருந்தான்.வழக்கத்துக்கு மாறா அவன் பேச்சு இருந்துச்சு..”என்றவன்,பிரதாப்பின் பதிலை கூட எதிர்பாராமல் அறைக்குள் சென்றுவிட்டான்.
ராதிகாவும்,கணவனை புரியாமல் பார்க்க..”ஏதாவது பிரச்சனைன்னா,அவனே சொல்வான்..நீ தூங்கு”எனவும்,கண்ணை மூடி தூங்க முயற்சி செய்தாள்.
ஆனால் அவளால் முடியவில்லை..பிரதாப் தூங்கவும்,எழுந்து சென்று ஜன்னலை திறந்து பார்த்தாள்..
மூன்று நாட்காளாக தொடர்ந்து..அதே இடத்தில் அந்த உருவம் நின்றிருக்க..’அராஜகக்காரி...’ராதிகா கண்ணீரை துடைத்துவிட்டு,கணவனின் அருகே படுத்துக் கொண்டாள்.
இதற்கென்ன தீர்வு என்றே அவளுக்கு தெரியவில்லை.
No comments:
Post a Comment