அத்தியாயம்
10
தனக்கு பின்னே தொடர்ந்து வந்த மனைவியை காணவில்லை என்றதும்,உடனே வெளியே சென்று பார்த்த பிரதாப்,அங்கே ராதிகா மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து,”ராதிகா”என்று அழைத்தபடி,அவசரமாக ஓடி வந்தான்.
ராதிகாவின் கன்னத்தை தட்டிய பிரதாப்,அவள் கண் விழிக்கவில்லை என்றதும்,மனைவியை தூக்கிக்கொண்டு,வீட்டிற்குள் வர,பிரதாப்பின் சத்தம் கேட்டு,விஷ்வாவும் வெளியே வந்தவன்,ராதிகாவை சோபாவில் பிரதாப் கிடத்தவும்,”என்னாச்சுண்ணா”பதறியபடி வந்தான்.
“தண்ணீ எடுத்துட்டு வா விஷ்வா”எனவும்,தண்ணீர் எடுத்துக்கொண்டு வர,அதை லேசாக முகத்தில் தெளிக்கவும்,ராதிகாவிடம் லேசான அசைவு தெரிந்தது.
இன்னும் நன்றாக முகத்தில் தண்ணீரை தெளிக்கவும்,ராதிகா கண்களை திறந்தவள்,”பிரதாப்..”என்று கணவனை இறுக அணைத்துக்கொள்ள,
“என்னம்மா..என்ன ஆச்சு”பயத்துடனே கேட்க..
“அங்க..அங்க..வெளில நான் பார்த்தேன் பிரதாப்”எனவும்,
“என்ன பார்த்தம்மா”புரியாமல் கேட்கவும்..பெயரை சொல்ல வந்தவள்,விஷ்வாவை அருகில் பார்த்ததும் அமைதியானாள்.
“என்ன ராதிகா..எதையாவது பார்த்து பயந்துட்டியா?”விஷ்வாவும் கேட்க..
“ஒண்ணுமில்ல விஷ்வா..காலையிலிருந்து சரியா சாப்பிடல..அதான் மயங்கி விழுந்துட்டேன்..தூங்கி எழுந்தா சரியாப் போயிடும்..நீ போ..”என்றவள் பிரதாப்பின் கைகளை பிடித்துக்கொள்ள..தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்று விஷ்வாவிற்கு புரிந்தது தான்.
ஆனால் இந்த நேரம் தனிமை விரும்புகிறாள் என்று உணர்ந்து,நாகரீகம் கருதி,”நீ பார்த்துக்க பிரதாப்”என்று அறைக்குள் சென்றவன்,
”ஹாஸ்பிட்டல் போகணும்னா,என்னை கூப்பிடுங்க”என்று கூறிவிட்டு,உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
விஷ்வாவின் உடலும்,மனமும் வெகுவாக சோர்ந்திருந்தது.மீண்டுமொருமுறை உயிர் பிழைத்திருக்கிறான்..அதுவே அவனுக்கு பயத்தை கொடுத்திருக்க..அப்படியே படுக்கையில் விழுந்தான்.
அப்போது தான் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தது நினைவில் வர,பயந்து போயிருப்பார் என்று உணர்ந்தவன்,போன் செய்வதற்காக,போனை தேட,போனை காணவில்லை.
விபத்து நடந்த இடத்திலையே விழுந்திருக்கக் கூடும் என்று நினைத்தான்.
அம்மாவிற்கு அழைத்தே ஆக வேண்டுமென்பதால் வெளியே வர,அப்போதும் ராதிகா பயம் விலகாமல்,கணவனின் அரவணைப்பிலையே இருப்பதை பார்த்தவன்,”பிரதாப்..என்னோட போனை காணோம்..அம்மாவுக்கு பேசணும்.உன்னோட போனை கொடு”கேட்கவும்,எடுத்துக் கொடுத்தான்.
லாக் எடுத்தவன்,”அம்மா ரெண்டு தடவை போன் அடிச்சிருக்காங்கடா”என்றவன் உடனே திருப்பி அவருக்கு அழைக்க..
“ராஜாக்கு என்ன ஆச்சு பிரதாப்..”கலக்கத்துடன் ராணி கேட்கவும்,
“அம்மா,நான் தான் பேசறேன்.எனக்கு ஒண்ணுமில்ல.காலேஜ்ல இருந்து கால் வந்துச்சு.அதான் கட் பண்ணிட்டேன்”எனவும் நம்பாமல்,
“ஏதோ பயங்கரமான சத்தம் கேட்டுச்சே ராஜா”என்றவர்,மிகவும் பாய்ந்து போயிருப்பது விஷ்வாவிற்கு தெளிவாக தெரிந்தது.
“அதெல்லாம் எதுவும் இல்லம்மா..இப்போ வீட்டுல தான் இருக்கேன்.நீங்க நம்பலைன்னா போட்டோ எடுத்து அனுப்பட்டுமா?”கேட்கவும்,
“வீடியோ கால் போடு ராஜா..அம்மாவுக்கு உன்னை பார்க்கணும்னு ஆசையா இருக்கு”என்றார்.
“சரி..வீடியோ கால் போடறேன் இருங்க..”என்றவன் படுக்கையறைக்குள் இருந்து,கட்டிலில் சாய்ந்தபடி போன் செய்தவன்,அவருக்கு ஆறுதலளிக்கும்படி சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தான்.
அண்ணன் போன் வேண்டுமென்றால்,அறைக்குள் வந்து எடுத்துக்கொள்ளட்டும் என்று எண்ணியவன்,அப்படியே தூங்கிவிட்டான்.
ராதிகா கொஞ்சம் தெளிவாகி,தங்கள் அறைக்குள் செல்ல,பிரதாப் தன் போனை எடுத்துக்கொண்டு ரூமுக்குள் வந்தவன்,”யாரைப் பார்த்த”என்று கேட்டுவிட்டு,
“விஷ்வா தூங்கிட்டான்”என்றும் கூறினான்.
ராதிகா பெயரை சொல்ல வரும் முன்...அவளுக்கு எதிரே சுவற்றில் புகை ஓவியமாய் நின்ற உருவம்,”என் மேல எப்பவுமே உனக்கு இரக்கமில்லை தானே ராதிகா”என்று கேட்க..
“அப்படியெல்லாம் இல்ல”எனவும்,
பிரதாப்போ..”அப்போ யாரையோ பார்த்தேன்னு நீ தான சொன்ன?”என்று இடையிட்டான்.
“நான் யார்னு காட்டிக் கொடுத்து,என்னை விரட்ட தானே பார்க்கற”மீண்டும் அந்த உருவம் கேட்க..
“இல்ல..இல்ல..நான் எதையும் பார்க்கல”என்று சத்தமாக கூறவும்,
“ஏன் இப்படி கத்தறம்மா..எதையும் பார்க்கலைனன்னா விடு”என்றவன்,அவளுக்கு போர்வையை எடுத்து போர்த்திவிட்டு,அருகே அமர்ந்து,அவள் தலையை கோதிவிட்டான்.
கணவனின் அந்த நெருக்கம்,ராதிகாவிற்கு தைரியத்தை கொடுத்தாலும்,கண் முன்னே தான் பார்த்த உருவத்தை அவளால் மறக்க முடியவில்லை.
ராதிகாவிற்கு குளிர்காய்ச்சல் வரும் போலிருந்தது.அருகிலிருந்த கணவனின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
மனைவி எதையோ பார்த்து பயந்திருக்கிறாள் என்று பிரதாப்பிற்கு தெளிவாக தெரிந்தது.
என்னவென்று கூற மறுக்கிறாள் எனும் போதே,விஷயம் சீரியசானது என்று உணர்ந்தவன்,சிறிது நேரத்திற்கு முன்,ராதிகா கூறியது போல, கோவிலுக்கு போவதென்று முடிவு செய்தான்.
மாலை நேரம் சென்று கொள்ளலாம் என்று முடிவெடுத்தவன்,ராதிகாவின் அருகிலேயே தூங்கிவிட்டான்.
சரியாக நான்கு மணிக்கு எழுந்துகொண்டவன்,தூங்கிக் கொண்டிருந்த ராதிகாவையும் எழுப்பினான்.
தூக்கக் கலக்கத்தில் இருந்தவளை வலுக்கட்டாயமாக எழுப்பியவன்,”ஒரு இடத்துக்கு போகணும்..கிளம்பு”என்றான்.
“எங்க போறோம்”கேட்கவும்,
“அது சர்ப்ரைஸ்”சிரித்துக்கொண்டே கூறவும்,அவளும் கோவிலுக்கு தான் செல்கிறோம் என்று உணரவில்லை.
அவர்கள் கிளம்பிய பின்னரும் விஷ்வா தூங்கிக் கொண்டிருக்க..அவனை எழுப்பிய பிரதாப்,”வெளில போயிட்டு வரோம் விஷ்வா..”எனவும்,
“போயிட்டு வாங்க”என்றவன் மீண்டும் படுத்துக்கொண்டான்.
அவனால் எழுந்துகொள்ள முடியவில்லை என்பதும் முக்கிய காரணம்.
அவர்கள் பைக்கில் வெளியே வர..எதிரே நந்தினி காரில் வந்தவள்..அவர்கள் கேட்டை தாண்டவும்,காரை விஷ்வாவின் வீட்டிற்கு முன்னேயே நிறுத்திவிட்டு இறங்கியவள்,காலிங் பெல்லை அடித்தாள்.
“யாரு”என்று எழுந்து வந்தவன்,வாயிலில் நந்தினி நிற்கவும்..வெளியே யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான்.
வேலைக்காரர்கள் ஆங்காங்கே வேலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
நந்தினி அதை கவனித்தாலும் கண்டுகொள்ளாமல்,”உள்ள வரலாமா”என்று கேட்கவும்,
“ம்ம்”என்றவன் உள்ளே செல்ல,காலில் காயம் இருந்ததால்,நடையிலையே வித்தியாசம் தெரிய..
“என்ன ஆச்சு விஷ்வா..கால்ல கட்டு போட்டிருக்கிங்க”கேட்கவும்,
“ரொம்ப நாளைக்கு அப்புறம் பைக் எடுத்தேன்.பேலன்ஸ் பண்ண முடியல..விழுந்துட்டேன்”என்றான்.
“ஹாஸ்பிட்டல் போனிங்களா?”
“ம்ம்”என்றவன்,
“எதுக்காக வந்தீங்க”கேட்க..
“மனசு சரியில்ல..அதான் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்..இந்தாங்க பிரசாதம்”என்று திருநீரை நீட்ட...மறுக்கக் கூடாதென்பதால்,நெற்றியில் இட்டுக்கொண்டான்.
“வைச்சுட்டேன்..போதுமா..நீங்க கிளம்புங்க”மரியாதை கொடுத்து பேசவும்,
“எப்பவும் போல நந்தினின்னே கூப்பிடலாமே”என்றவள்,விஷ்வாவின் கால்களில் பெரிதாக அடிபட்டிருக்கிறதா என்று ஆராய..
“உங்க ஸ்டேடஸ்-க்கு நாங்க மரியாதை கொடுக்கணும் மேடம்.நான் வேலை செய்யற காலேஜ்-க்கு ஓனர் நீங்க..!இப்படி நீங்க நடந்துக்கறது உங்களுக்கே சரியா இருக்கா..?எதுவும் தெரியாம செய்யறதுக்கு,நீங்க டீன்ஏஜ் பொண்ணும் இல்ல..”எனவும்,
“நான் எதையும் தெரியாம செய்றேன்னு சொல்லவே இல்லையே விஷ்வா..எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.அதை நான் மறைக்க விரும்பல..அடுத்தவங்க என்ன சொல்வாங்கன்னு நினைச்சுக்கிட்டு,நான் கவலைப்பட போறதில்ல..அப்படி கவலைப்படற அளவுக்கு,லவ் பண்றது பெரிய தப்பும் இல்ல”என்று வாதம் செய்தவள்,
“நான் யார்கிட்டவும் இப்படி இருந்ததில்ல விஷ்வா..முதல் முறையா உங்களை எங்க வீட்டுல பார்த்த போதே,ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு..காலேஜ்ல என்னால நிம்மதியா இருக்கவே முடியல.அதான் உடனே உங்களை பார்க்க வந்துட்டேன்..!
“உங்களோட பேசும் போது..எனக்குள்ள ஏதோ ஒரு சந்தோஷம்..என்னால அதை பிரிச்சு சொல்ல முடியல..இந்த பீலிங் எனக்கு பிடிச்சிருக்கு.காலம் முழுக்க..இந்த உணர்வை நான் அனுபவிக்கணும்னு விரும்பறேன்..”என்றவள்,
விஷ்வா அமைதியாக இருப்பதை பார்த்து,”என்னோட அணுகுமுறை உங்களுக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்..ஒரே பொண்ணாவே வளர்ந்துட்டதுனால,எனக்கு இப்படி பேசி தான் பழக்கம்..!
“நான் கொஞ்சம் அடமென்ட் தானே தவிர...யாருக்கும் எப்பவும் கெடுதல் நினைச்சது கிடையாது விஷ்வா..என் குணத்தை நான் மாத்திக்க முயற்சி பண்றேன்..ஆனா அதுக்கு நீங்க எனக்கு வேணும்..காலம் முழுக்க உங்களோட நான் சந்தோஷமா வாழணும் விஷ்வா..”உணர்ச்சிப்பெருக்கில் அழுதுவிட,கண்களை துடைத்துக் கொண்டாள்.
விஷ்வா அப்போதும் அமைதியாக இருக்க..”நான் என்ன பண்ணா,என்னோட லவ்வை புரிஞ்சுக்குவீங்க”என்று கவலையோடு கேட்க..
“நீ யாரையும் இதுவரைக்கும் லவ் பண்ணல..ஓகே..ஆனா நானும் லவ் பண்ணாம இருந்திருப்பேனா”கேட்கவும்,
திடுக்கிட்டவள்,உடனே தன்னை சமாதானம் செய்துகொண்டு,”அப்படி லவ் பண்ணியிருந்தா..முதல் முறை நான் உங்ககிட்ட என் விருப்பத்தை சொன்னப்பவே.. உங்களுக்கு ஆள் இருக்குன்னு சொல்லியிருப்பீங்க..அப்போ நீங்க லவ் பண்ணலை தானே”எதையோ கண்டுபிடித்துவிட்டதை போல சந்தோஷமாக கேட்கவும்,விஷ்வாவிற்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.
தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவன்,”நான் லவ் பண்ணலை தான்..ஆனா உன்னோட லவ் உண்மையா இருக்குமா..?இவ்வளவு சீக்கிரம் ஒருத்தர் மேல லவ் வரும்னு,எனக்கு நம்பிக்கையே இல்ல..!
“எனக்கு நம்பிக்கை வரணும்னா..இந்த ஒரு வருஷத்துக்கு,என்னை நீ பார்க்க கூடாது..பார்த்தாலும் பேசக் கூடாது..அப்போ உன்னோட லவ் இப்படியே இருக்குதான்னு பார்க்கறேன்..அப்பவும் நீ என்னை லவ் பண்ணா..அடுத்த நாளே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்”என்று ஏதோ கதையில் படித்த வசனங்களை அப்படியே கூறவும்..
“என்னால உங்ககூட பேசாம,ஒருவருஷத்துக்கு எல்லாம் இருக்கவே முடியாது..இப்பவே உங்களை எப்படி பார்க்கறதுன்னு ஒவ்வொரு நிமிஷமும் யோசிச்சு,சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் மீட் பண்ணிட்டு இருக்கேன்..இதுல ஒரு வருஷமா..சான்சே இல்ல..”என்றவள்..
“உங்க வீட்டுல எதுவும் சொல்வாங்கன்னு பயப்படறீங்களா..நான் அப்பாவ பேச சொல்றேன்”எனவும்,விஷ்வாவிற்கு கோபம் வந்துவிட்டது.
“நீ இப்போ போயிடு நந்தினி..எதுவானாலும் இன்னொரு நாள் பேசிக்கலாம்”எனவும்,மறுக்கப் போன நந்தினியிடம்,
“எனக்கு பிடிவாதம் பிடிச்சா,சுத்தமா பிடிக்காது நந்தினி..”குரலை உயர்த்தி பேசவும்,
“நீங்க இப்படி பேசறதும்,எனக்கு பிடிச்சு தான் இருக்கு”என்றவள் துள்ளலான நடையோடு வெளியே செல்ல..
‘இந்த பொண்ணுங்க மனசை புரிஞ்சுக்கவே முடியல.ஒவ்வொரு பொண்ணும் ஒவ்வொரு ரகம்’மனதிற்குள் பேசிக்கொண்டவன்,மனதை மாற்றுவதற்காக டிவியை ஆன் செய்தான்.
வெளியே சென்ற அண்ணன்,அண்ணி எப்போது வருவார்கள் என்று எதிர்பார்க்கவும் ஆரம்பித்து...அண்ணனுக்கு போன் செய்யலாம் என்று நினைக்கும் போது,போனை தவற விட்டது ஞாபகம் வர..மீண்டும் அதே இடத்திற்கு சென்று பார்ப்பது முட்டாள்த்தனம் என்றே அவனுக்கு தோன்றியது.
போன் காணவில்லை என்று எழுதி கொடுத்துவிட்டு,பழைய எண்ணையே வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தான்.அவனுடைய போனில் பெரிதாக எந்த தகவலும் இல்லாததும் முக்கிய காரணம்..!
**
கோவிலுக்கு ராதிகாவை அழைத்து வந்த பிரதாப்,”நீ சொன்ன கோவில் இது தானே”என்று கேட்க..
“ஆமாம்”என்றவள்,தயக்கத்துடனையே தான் உள்ளே சென்றாள்.
மாலையில் காதில் கேட்ட குரல்,அவளை மனதார தெய்வத்தை வணங்கவிடவில்லை.
சுயநலமாக நடந்துகொள்கிறோமோ என்ற குற்றவுணர்ச்சியில்,கடவுளின் முன் நின்றவள்,அங்கே கொடுத்த பிரசாதத்தை வாங்கி,கோவிலின் பிரகாரத்திலையே ஒரு ஓரமாய் கொட்டிவிட்டு அமர்ந்தாள்.
பிரதாப் திருநீர் வைத்துவிட முயல..”நானே வைச்சுக்கறேன்”என்று பெயருக்கு வைத்துக்கொண்டவள்...
“போகலாமா”என்றும் கேட்க..
“இங்க யாரையோ பார்த்தா..நல்லதுன்னு வீட்டுல சொன்ன..இங்க வந்து,எதுவும் பேசாம இப்படி இருந்தா என்ன அர்த்தம் ராதிகா..நீ யாரை பார்த்த...”என்று திரும்பவும் கேட்க..ராதிகா அமைதியாக இருக்கவும்,
“எனக்கு ஒரு கெஸ் இருக்கு”என்றவன்..
“விசுன்னு யாரோ கூப்பிட்டதா,விஷ்வா சொன்னானே..இதுலயிருந்தே எனக்கு புரிஞ்சிருக்கும்னு,உனக்கு தெரியாதா ராதிகா..”என்று கேட்க..
“நான் எதையும் பார்க்கல..விஷ்வாவும் பழைய ஞாபகத்துல தான் சொல்லியிருப்பான்”என்றாள்.
“எனக்கே நீ பொய் தான் சொல்றேன்னு,அப்பட்டமா தெரியுது ராதிகா..நீ இரக்கம் காட்டுறதுக்கு,அது ஒண்ணும் உயிருள்ள ஜீவன் இல்ல..ஆவி....!
“அதுக்கு நல்லது,கெட்டது எதுவும் தெரியாது..உயிரை எடுக்கவும் தயங்காது..நீ மறைக்கிற விஷயத்தால,நம்ம வீட்டுல யாரோட உயிருக்காவது ஆபத்து வந்துட்டா...அதோட விளைவு ரொம்ப மோசமா இருக்கும்..விஷ்வாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா...?”என்று நிறுத்த,
“அப்படியெல்லாம் எதுவும் ஆகாது”என்றாள்.
“அதை நீ எப்படி உறுதியா சொல்ல முடியும் ராதிகா..ஆவிங்களை பற்றி உனக்கு தெரியாது..நான் கடவுளை எந்த அளவுக்கு நம்பறேனோ..அதே அளவுக்கு ஆவியையும் நம்பறேன்...!
“நிறைவேறாத ஆசைகளால இறக்கறவங்க மட்டுமில்ல...கெட்ட நேரத்துல இறக்கறவங்களும்,ஒரு குறிப்பட்ட காலம் வரைக்கும்,நம்ம கூடவே தான் ஆவியா அலைஞ்சுட்டு இருப்பாங்க..!
“அந்தவொரு விஷயத்துக்கு பயந்துட்டு தான்..விஷ்வாவை ஊர்ல இருக்க விடாம,இங்க கூட்டிட்டு வந்தேன்..அம்மா விஷ்வாவை பார்க்காம இருக்கறதுக்கும்,இது தான் முக்கியமான காரணம்....!
“ஊர்ல நடக்கற கேஸ் எல்லாம் ரொம்ப சாதாரணம்..அதை பணத்தை கொடுத்து,ஆஃப் பண்ண முடியும்..அப்படி தான் விசாரணையை கிடப்பில போடவும் வைச்சிருக்கேன்..”என்று மனைவியிடம் உண்மையை பகிர்ந்துகொள்ள..
“கேஸ் விசாரணை நடந்தா தானங்க,என்ன நடந்துச்சுன்னு உண்மை தெரிய வரும்..அப்படி செய்ய விடாம,பணத்தை கொடுத்து ஏன் தடுத்து வச்சிருக்கீங்க”கேட்க..
“உண்மை தெரிஞ்சா மட்டும் என்ன ஆகும்..?போன உயிர் திரும்பி வருமா..?இல்ல விஷ்வாபட்ட அவமானம் எல்லாம் மறைஞ்சு போயிடுமா..?இன்னமும் அவனோட முதுகில இருக்க தழும்பை பார்க்கும் போதெல்லாம்...எனக்கு எப்படி இருக்கு தெரியுமா...?”என்றவன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திகொண்டு..
“பழசெல்லாம் போகட்டும்..விடு...பணம் கொடுத்து..எல்லாம் சரி பண்ணி வச்சிருக்கதினால தான்..இப்போ நிம்மதியா இருக்க முடியுது...இனி முழு நிம்மதி கிடைக்கணும்னா...அது உன்கையில தான் இருக்கு..நீ மனசு வைச்சா..அந்த ஆவியை,நம்மகிட்ட நெருங்க விடாம செய்யலாம்..”என்றான்.
“நான் என்ன செய்ய முடியும்..”
“மனமுருக கடவுளை வேண்டிக்க..யாருக்கும் இரக்கப்பட்டு,எந்த முட்டாள்த்தனத்தையும் செஞ்சு வைக்காத..”எனவும்,கணவனை முறைத்தாள் ராதிகா.
“எழுந்துக்கோ”என்றவன்,இறைவனின் பாதத்தில் விழ..ராதிகாவும் இறைவனின் பாதத்தில் விழுந்து வணங்கினாள்.
“நாளையிலிருந்து தினமும் கோவிலுக்கு வருவோம்.விஷ்வாவையும் கூட்டிட்டு வருவோம்”என்றான்.
“ரொம்ப பயந்துட்டிங்களா?”
“ஆமாம்.இனியெல்லாம் முதல்ல இருந்து ஆரம்பிக்க முடியாது...இந்த ஆவி..பேய் பிரச்சனையில இருந்து தப்பிக்கறதுக்கு...பெரிய வழின்னா..அது கோவிலுக்கு வர்றது தான்...!
“தொடர்ந்து கோவிலுக்கு வரும் போது,எந்த கெட்ட சக்தியும் நம்மை நெருங்காதுன்னு சொல்வாங்க.. வேறெந்த பரிகாரமோ..பூஜையோ..போலி சாமியார்களோட மந்திரமோ ஆவியை கட்டுப்படுத்தாது” எனவும்,கணவனின் பேச்சை மதித்து,தினமும் கோவிலுக்கு வருவதற்கு ஒத்துக் கொண்டாள்.
ஆனால் மறுநாளே..அவளால் இறைவழிபாட்டை செய்ய முடியாமல் போனது..!!
No comments:
Post a Comment