என்னவோ மயக்கம்-13

13

“பிரத்யுக்ஷா மைக்கேல்”-இந்த பெயரை இணையத்தில் தேடினால் இவளது குடும்ப வரலாறே கிடைக்கும்.இப்போது பிரபலமான விருது வாங்கிய நடிகை என்பதால்,பிரத்யுக்ஷா,பிரத்யா இருவரும் இரட்டை சகோதரிகள் என்பது முதற்கொண்டு எல்லாமே விபரம் தெரிந்தவர்களுக்கு தெரியும்.மதுவிற்கு அவ்வளவாக வெள்ளித்திரை அனுபவம் இல்லாததால்,ஆங்காங்கே இதுபோல பேச்சைக் கேட்க நேர்ந்த போதிலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டாள்.

அவளுக்குமே ஓரளவுக்கு பிரத்யா-அருண் பிரிவின் காரணம் அவளது சகோதரியாகத்தான் இருக்கும் என்ற யூகம் இருந்தது.மேற்கொண்டு அதைப்பற்றி சிந்திக்கவே அவளுக்கு விருப்பமில்லை என்பதால் கண்டும் காணாமல் விட்டுவிட்டாள்.அதனாலையே தோழிகளின் நட்பு இன்னும் ஆழமாகியது.

அவ்வப்போது உடன் பணிபுரிபவர்கள் யாரேனும் தெரிந்து கேள்வி கேட்டால்,பிரத்யா சில நேரம் சங்கடமாய் நெளிவாள்.பல நேரம் துணிந்து பதில் கொடுத்திருக்கிறாள்.சிலரின் ஆபாச ஆசை வார்த்தைகளும் கேட்க நேர்ந்திருக்கிறது.அதனால் தானோ என்னவோ அருணுடனான வாழ்க்கைக்கு மிகவும் ஏங்குகிறாள் என்று எண்ணி,தோழிக்கு உறுதுணையாக இருந்துவருகிறாள்.

பெரிய பணக்கார குடும்பம் என்றால் அங்கு பிரச்சனையே இருக்காது என்று தான் சிறுவயதில் எல்லாம் நினைப்பாள்.ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனை இருப்பதை கல்லூரிக்கு சென்ற பின் தான் முழுதாய் உணர்ந்துகொண்டாள்.

இப்போது தனக்கு வந்திருக்கும் தலையாய பிரச்னையை பற்றிய சிந்தனையில் குறுக்கும் நெடுக்குமாக அறைக்குள் நடந்துகொண்டிருந்தாள்.

எல்லாம் ஜீவாவின் கைங்கரியம்.

நேற்றைய தினம் மாடியில் காத்து வாங்கிக்கொண்டிருந்தவளிடம் வேண்டுமென்றே வம்பளந்து கொண்டிருந்தான்.மதுவுக்கோ பயங்கர எரிச்சல்!

அதற்கு முக்கிய காரணம்,ஜீவாவுக்கு பிரத்யூ மேல் மதிப்பு இல்லாதது போல இருந்த செய்கை தான்.அவனது வம்புக்கு பதில் கூறாமல்,

“பிரத்யாவை பார்த்து நீங்க ஏன் ஒதுங்கி போறீங்க? அவளை பார்க்கும் போது ஏன் ஒருமாதிரி...அதாவது நீங்க அவளை கீழ்த்தரமா பார்க்கற மாதிரி  எனக்கு ஒரு பீல்..”என்றதும் திடுக்கிட்டான்.

“அப்படியெல்லாம் இல்லையே”தடுமாறியவன்,என்ன நினைத்தானோ..உடனே நிமிர்ந்து நின்று,

“அப்படியே தான்”என்று ஒத்துக்கொண்டான்.

அதுவே மதுவின் சீற்றத்துக்கு போதுமாய் இருந்தது.

“அவ வீட்டுலையே இருந்துட்டு,அவளை பற்றி இப்படி நினைக்கறது அசிங்கமா இல்ல”

“இல்லவே இல்லை..எனக்கு எப்போ அவளோட சிஸ்டர் பற்றி தெரிய வந்துச்சோ,அப்பவே எனக்கு இங்க இருக்கதே பிடிக்கலை.என்னோட அக்காவுக்காக எப்போவோ ஒருதடவை தான் வருவேன்.இப்போ நீ இருக்கறதினால தொடர்ந்து இங்க இருக்கேன்.அவ்வளவு தான்.”

“ஓ..”என்றவள் அதோடு நிறுத்திவிட்டு நகரப்போனாள்.ஆனால் அவன் கையைப்பிடித்து நிறுத்தவும் பட்டென்று தட்டிவிட்டாள்.அவனுக்கு கோபம் வரவில்லை(வந்தால் தான் ஆச்சர்யம்)

“மது,எனக்கு மத்தவங்களை பற்றி கவலையில்ல.நான் உன்னை லவ் பண்றேன்.நாம கல்யாணம் பண்ணிக்கலாமா”என்றான் உறுதியான குரலில்!!

“பிரத்யூ மேல தப்பான அபிப்ராயம் இருக்கும் போது,அவ கூட இருக்கற என்மேல ரொம்ப நல்ல எண்ணமோ”கேலியாக கேட்டாலும்,அதிலிருந்த கோபம் புரிய,

“நீ ரொம்ப நல்ல பொண்ணு தான்.நான் விசாரிச்சுட்டேன்.உன்னோட பேமிலிக்காக நீ எவ்வளவு பண்ணியிருக்க..நான் கூட அவ்வளவு பொறுப்பு கிடையாது.இனிமேல் அப்படி இருக்கக் கூடாதுன்னும் முடிவு பண்ணியிருக்கேன்.நீ உன்னோட விருப்பத்தை மட்டும் சொல்லு.மத்ததையெல்லாம் நான் பார்த்துக்கறேன்”என்றவனிடம் பேசக்கூட விருப்பமில்லாமல் வந்துவிட்டாள்.

இப்போதும் அவன் சொன்னதற்கு பதில் சொல்லும் எண்ணமெல்லாம் அவளுக்கு இல்லை.இருந்தாலும் ஒருவித டென்ஷனில் சுற்றிக்கொண்டிருந்தாள்.தலைவலி வேறு அதிகமாய் இருக்க,டீ குடித்தால் சரியாகிவிடும் என்று எண்ணியவள்,தன் அறையிலிருந்து,சமையலறைக்கு சென்றாள்.

உள்ளே ஜீவாவின் சத்தம் கேட்க,”மறுபடியும் இவனா”அலுப்புடன் திரும்பி நடக்க துவங்கிய போது,இவளது பெயர் அடிபட சட்டென்று நின்றுவிட்டாள்.

“அக்கா,நீ தான் மதுகிட்ட பேசி சம்மதம் வாங்கணும்.நான் என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காம பேச்சை டைவேர்ட் பண்ணிடறா.எனக்காக நீ பேசிப் பார்.ப்ளீஸ்”என்று கெஞ்ச,

“ஜீவா,நீ எல்லா பொண்ணுங்க கூட பழகற மாதிரி மதுவை நினைக்காதே.உண்மையாவே சீரியஸா அவளை மேரேஜ் பண்ணிக்கற ஐடியா இருந்தா மட்டும் சொல்லு.மேல ப்ரோசீட் பண்ணலாம்.இல்லைன்னா ஆளை விடு”என்றவள் தன் வேலையில் தீவிரமாக,

“அக்கா,பார்க்கற எல்லா பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.எனக்கு மதுவை மட்டும் தான் பிடிச்சிருக்கு.உன்னால முடியுமா,முடியாதா..அதை மட்டும் சொல்லு”என்று சொல்லிக்கொண்டே திரும்பியவன் வாயிலில் நின்றிருந்த மதுவை பார்த்ததும் திகைத்தவன்,பின்பு சந்தோஷமாய்..

“நீயே கேட்டுட்டியா,நம்மளை பற்றி தான் பேசிட்டு இருந்தேன்”என்றவனை அற்பமாக பார்த்தவள்,

“நானும் உங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கேன்.அதுவும் உங்க அக்காவே உங்களுக்கு பொண்ணுங்களோட பழக்கம் இருக்குன்னு சொல்லிட்டு இருந்தாங்க.ஒரு பொண்ணு பின்னாடி அவளோட அனுமதியில்லாம சுத்தறது,அந்த பொண்ணை அன்கம்பர்ட்டபிலா பீல் பண்ண வைக்கறது கூட பாலியல் வன்முறை தான்..அப்போ நீங்க கெட்டவர்னா...உங்களோட அக்காவும் கெட்டவங்கன்னு அர்த்தமா”பட்டென்று கேட்டவளை..அடிக்க கையை ஓங்கியே விட்டான்.

அவளது அசையாத பார்வையில் கையை இறக்கியவன்,அதிர்ந்து போய் நின்றிருந்த அக்காவை வெறித்துப் பார்த்தவன்,

“நீயெல்லாம் பொண்ணாடி,இப்படி வார்த்தையை சவுக்கு மாதிரி அள்ளி வீசற”கோபமாய் இரைந்தான்.

கொஞ்சமும் அசராமல்,”உங்க அக்காவை சொன்னா மட்டும் கோபம் வருதில்ல.அப்போ என் பிரண்டை மட்டும் ஏன் அவ அக்காவை வைச்சு அப்படி பார்க்கறீங்க.உங்க உடன் பிறப்புக்கு ஒரு நியாயம்.அவளுக்கு ஒரு நியாயமா? ஒருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்தாலும்,கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லாத நீங்க விமர்சிக்க என்ன உரிமை இருக்கு”அழுத்தமாய் கேட்டதில்,கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல்..

“ச்சே”என்றவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான்.

இன்னமும் அதிர்ச்சி விலகாமல் நின்றிருந்த இந்துவை பார்க்கவே மதுவிற்கு பாவமாய் இருந்தது.

“சாரி இந்துக்கா..நான் உங்க தம்பிக்கு புரிய வைக்கறதுக்காக அப்படி பேச வேண்டியதா போச்சு.என்னை மன்னிச்சிடுங்கன்னு சாதாரணமா சொல்லிட முடியாது.வேற வார்த்தையும் தெரியல”என்றவளுக்கோ கண்ணில் நீர் முட்ட..அதை கவனித்த இந்துவுக்கோ மனம் இளகத்தான் செய்தது.

தன்னை கொஞ்சம் தேற்றிக்கொண்டவள்,”பரவாயில்ல மது.ஆனால் இனி யாரையும் இப்படி பேசிடாதே..என் தம்பி ஏதோ தப்பா பேசியிருக்கான்-னு தெரியுது.அதுக்காக அவனை தேர்ட்-ரேட் பொறுக்கி அளவுக்கு விமர்ச்சிருக்க வேண்டாம்”என்றவள் கனத்த மனத்துடன் காயை வெட்ட துவங்க,மதுவுக்கோ குற்றவுணர்ச்சி அதிகரிக்க துவங்கியது.

இனி யாரிடமும் இப்படி பட்டென்று பேசவும் வேண்டாம்..இப்படி வருத்தப்படவும் வேண்டாம் என்ற ஞான உதயம் உதிக்க..சங்கடமான மனநிலையில் வெளியே வந்தவள் எதிர்ப்பட்ட பிரத்யாவின் அலங்காரத்தில் அசந்து தான் போனாள்.

“வாவ்,பிரத்யா..இன்னைக்கு என்ன விசேஷம்..சும்மா கலக்கற”என்று மது கேட்க,சத்தம் கேட்டு வெளியே வந்த இந்து,

  “பிரத்யா,ரொம்ப நாளைக்கு அப்புறம் உன்னை இப்படி பார்க்கறேன்.கழுத்தில மட்டும் வேற செயின் போட்டுக்கயேன்.உன்கிட்ட தான் நிறைய கலெக்ஷன் இருக்கே.ஏன் எப்பவுமே இதையே போட்டுட்டு இருக்க?”எனவும்,

    “இது அருண் கொடுத்தது”என்றாள்.

“அதுக்காக வேற எதுவும் போட்டுக்கக் கூடாதா என்ன?”என்றவள் தன்னறைக்கு சென்று பிரத்யாவிற்கு வாங்கி வைத்திருந்த,அவளுக்கு மிகவும் பிடித்த பிளாட்டின செயினை எடுத்து வந்து கழுத்தில் மாட்டியும் விட்டாள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மதுவின் முகத்தில் புன்னகை மட்டுமே..அவளிடம் பொறாமை என்ற பேச்சிற்கே இடமில்லை..இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ அவளிடம் கற்றுக்கொள்ளலாம்.

மது எதையும் வாங்கிக்கொள்ளமாட்டாள் என்று பிரத்யாவிற்கு தான் தெரியுமே!! அதனாலையே இந்துவை மறுக்க முடியாமல்,”நான் கோவிலுக்கு போயிட்டு வர்றேன்-க்கா.மதுவை எங்கேயாவது கூட்டிட்டு போங்க.மாமா வேலைக்கு இன்டர்வியூக்கு கூப்பிடற மாதிரியும் தெரியல.என்னன்னு விசாரிச்சு சொல்லுங்க”என்றவள் பூஜையறை சென்று வணங்கிவிட்டு காரை நோக்கி சென்றாள்.

அவளது செய்கை இந்துவிற்கு விசித்திரமாக இருந்தது..ரொம்பவும் விசேஷமான நாட்கள் தவிர மற்ற நாட்கள் எல்லாம் பூஜையறை பக்கம் போகவே மாட்டாள்.

“இன்னைக்கு இவ பிறந்த நாள் கூட இல்லையே”வாய்விட்டு புலம்பும் இந்துவின் குரல் கேட்டும் பதில் சொல்லாமல்,டிரைவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தானே கோவிலுக்கு தனியாக புறப்பட்டு சென்றாள்.

கோவிலில் கூட்டம் அதிகம் இல்லாமல் இருக்க,அம்மனை வணங்கிவிட்டு வலதுபுறமாய் இருந்த கோவில் பிரகாரத்தில் அமர்ந்தாள்.

கோவிலுக்கு வரும் பழக்கத்தை அவளுக்கு கற்றுக்கொடுத்ததே அருணின் அம்மா வனிதா தான்.

“எப்பவும் இல்லைன்னாலும்,நல்ல நாளுக்காவது கோவிலுக்கு போகணும் பிரதீ”என்பார்..இவளை செல்லமாய் பிரதீ என்று அவர் அழைத்ததிலையே அம்மணி டோட்டல் பிளாட்.எப்போதும் கண்டிப்புடன் இருக்கும் பெரியம்மாவிடமிருந்து மாறுபட்டு,அருணுக்காகவே தன்னிடம் பாசமாய் பழகும் அவர் மேல் இவளுக்கு அதிகப்படியான மரியாதை கலந்த பாசம் இருந்தது.அதனாலையே அவர் சொல்வதையெல்லாம் தட்டாமல் செய்துவிடுவாள்.

அவரின் நினைவோடையே கண்மூடி அமர்ந்திருக்க,”பாப்பா..நீ அருண் கூட சுத்தின புள்ளை தான”என்ற குரல் கேட்க திடுக்கிட்டு கண் விழித்தாள்.

எதிரில் அருணின் மாமா கந்தன் நிற்க,”சித்தப்பா நீங்களா..நீங்க எப்படி இங்க”சந்தோஷத்தில் படபடப்போடு கேட்டாள்.

“என்ற மருமவனுக்கு இங்க தான் வேலை கிடைச்சிருக்கு.ஜோதி பிள்ளையும் கூட இங்க தான் இருக்கு.கல்யாணத்துக்கு உன்னை கூப்பிடணும்னு நினைச்சிட்டே இருந்தேன்.அருண்கிட்ட விலாசம் கேட்டப்போ தான் எல்லாம் சொன்னான்.இருந்தாலும் அந்த கெழவனுக்கு இம்புட்டு ஏத்தம் ஆகாது”என்று நொடிக்க,சிரிப்புடன்,

“சித்தப்பா அவரை விடுங்க.ஜோதி இப்போ எப்படி இருக்கா”பேச்சை திசை திருப்ப,

“ஆம்பளப்பிள்ள பிறந்திருக்கு.ஒரு வயசு ஆச்சு.முன்னவே கல்யாணம் ஆகியிருந்தா இப்போ பிள்ளைக்கு நாலு வயசு ஆகியிருக்கும்”என்று பெருமூச்சுவிட,சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

கந்தன்-இவர் பாம்பா பழுதா என்று அறிய முடியாத ரகம்..எக்காரணத்தைக்கொண்டும் இவரிடம் முகம் சுழித்துவிட முடியாது.பேசியே ஆளை கொண்டுவிடுவார்.

அதனால் தான் எல்லாம் தெரிந்திருந்தும்,இங்கீதம் இல்லாமல்’அருணோட சுத்தின பிள்ளை’என்று மரியாதையில்லாமல் சொன்ன போது கண்டுகொள்ளாமல் இருந்தாள்.

மரியாதை நிமித்தமாய் அவரை வீட்டிற்கு அழைக்க,”ஊர்ல வேலை நிறைய கெடக்கு பாப்பா.ரயிலுக்கு நேரமாச்சு.இன்னொரு நாள் வாரேன்.அதுக்கு முன்னாடி அருணோட தாத்தாவை பார்த்து நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டா தான் என் மனசு ஆறும்.கூடிய சீக்கிரம் எல்லாம் நல்லதே நடக்கும்”என்று ஆசீர்வதித்துவிட்டு செல்ல...அவரது வார்த்தை பலிக்க வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்.

இன்றைய நாளின் முக்கியத்துவமும்,அருண் இப்போது என்ன செய்துகொண்டிருப்பான் என்ற எண்ணத்துடனும்..கண்களை மூடி அமர்ந்தாள்..


எண்ணங்களோ முதல்முறை கந்தனை பார்த்த நாளையும்,அதை தொடர்ந்து நடந்த சம்பவங்களையும் நோக்கி பயணிக்க...வீட்டிற்கு வர நேரமாகும் என்று பெரியம்மாவிற்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு,ஓய்வாய் சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள்.

நினைவுகளோ அவன் வசம்!!



என்னவோ மயக்கம்-12

 12

எப்போதும் சத்தமாகவே இருக்கும் அந்த வீட்டில் இப்போது இருப்பவர்கள் வெங்கடாசலத்தின் மகள் பாரதி,மருமகன் சுந்தரேசன்,அவர்களது ஒரே புதல்வி மிருதுளா தான்.

அருண் பகல் பொழுதில் வேலை வேலை என்று ஓடுபவன் ஓய்வு நேரத்தில் இந்த வீட்டில் இருந்தாலும்,கட்டாயம் இரவு தூக்கத்திற்கு,அந்த மாளிகையின் அருகில் இருக்கும் சிறிய ஓட்டு வீடான அவனது தந்தைக்கு சொந்தமான அந்த வீட்டிற்கு ஓடி விடுவான்.வெங்கடாசலத்திற்கு இதில் வருத்தம் தான்.

எப்படியெல்லாமோ அதை வார்த்தையில் வெளிப்படுத்திய போதும் கூட அவன் இளகவேயில்லை.ஒன்றைப் பற்றி முடிவு எடுத்துவிட்டால் அதிலிருந்து மாறலாம் என்று நினைக்க கூட மாட்டான் என்று தெளிவாகவே புரிந்து வைத்திருந்தார்..தன்னுடைய குணத்தை அப்படியே பிரதிபலித்து பிறந்திருந்ததினால்,இதை பிறரிடம் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வார்.

வெங்கி தனது  அத்தனை சொத்துக்களுக்கும் வாரிசுகளாக அருணையும்,மிருதுளாவையும் நியமித்தவர் தன் பொறுப்பில் ஒரே ஒரு காட்டன் மில்லை வைத்துக்கொண்டார்.அதை தன் பொறுப்பில் கொடுக்க சொல்லி அருண் கேட்க,அப்போதிலிருந்து தாத்தனுக்கும் பேரனுக்கும் ஒரே சண்டை.

இதோ இப்போது கூட இருவரும் ஹாலில் எதிரெதிரே தான் அமர்ந்திருக்கிறார்கள்.ஒரு வார்த்தை..ஒரு வார்த்தை கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லையே..அவ்வளவு அழுத்தம் இருவரும்!(கேடி பாய்ஸ்)

இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்த மிருதுளா,”தாத்தா..மாமா ஆசைப்படறாங்க தானே.கொடுத்துடுங்க தாத்தா.வீணா எதுக்கு இப்படி அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க”-கொஞ்சம் சத்தமாய் குரலை உயர்த்தி மாமனுக்கு பரிந்து பேச,

அதுக்கே பயந்து(?) போனவராய்,”நீ சொன்னா செஞ்சிடலாம் மிது கண்ணு”என உடனே சரண்டராகிவிட்டார்..சம்மதித்தும்விட்டார்.

பொல்லாத மனுஷன்! -எப்படியெல்லாமோ தாத்தனை திட்ட வேண்டுமென்று வெறியே வந்தது அருணிற்கு..!கிட்டத்தட்ட ஒரு மாசமாய் கேட்டு கேட்டு நொந்து போயிருக்க,பேத்தியின் ஒரே பேச்சில் சம்மதித்துவிட்டதில் இவனுக்கு ரொம்பவே வருத்தமாகிவிட்டது.

அதைக் காட்டாமல் மேகசீன் எடுத்து படிக்க ஆரம்பித்துவிட்டான்.

மிருதுளாவிற்கு இது தான் நடக்குமென்று தெரியும்.இதனாலையே இவ்வளவு நாள் தலையிடாமல் இருந்தாள்..இப்போது தலையிட்ட குத்தத்திற்கு இன்னும் சில மணி நேரங்களுக்கு அருண் பேச மாட்டான் என்பதில் சலிப்பு ஏற்பட வெங்கியை முறைத்தாள்.

இதையெல்லாம் கவனித்தவாறே,டைனிங் டேபிளில் அமர்ந்து,பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்த சுந்தர்,”ஏன்டி பாரதி,என் மாமன் ஏன் எப்போ பார்த்தாலும்,என் மருமகனுக்கு எதிராவே இருக்கார்..உன் பொண்ணு சொன்னா மட்டும் உடனே சரின்னு தலையாட்டிடறார்? பாவம் என் மருமவபுள்ள,மொகமே தொங்கி போச்சு”-எப்போதும் போல் மனைவியிடம் மாமனைப்பற்றி குற்றப்பத்திரிக்கை வாசிக்க,

“இதை அவர்கிட்ட போய் கேட்க வேண்டியது தானே! அவர் முன்னாடி அப்படியே ரொம்ப நல்லவர் மாதிரி பம்மறது! என்கிட்டே வந்து வீரத்தை காட்டறது”என்று நொடிக்க,அதையெல்லாம் கண்டுகொள்ளாதவராய் தட்டில் இன்னும் கொஞ்சம் பிரியாணியை எடுத்து கொட்டி,சப்புகொட்டி தின்று,தான் ஒரு சாப்பாட்டு ராமன் என்பதை காட்டிக்கொண்டார்..வஞ்சம் இல்லாத மனுஷனும் கூட!!

இவர்களின் அக்கப்போர் தாங்காத பாரதி ஆங்கில நியூஸ் சேனல் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.

கலிபோர்னியாவில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியை ஒளிபரப்பிக்கொண்டிருந்தனர்..சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட் ஆன ஒரு ஹாலிவுட் படம் நிறைய அவார்டை தட்டி சென்றது.

அதில் சிறந்து துணை நடிகைக்காக விருதை,”பிரத்யுக்ஷா மைக்கேல்”அவர்களுக்கு வழங்கப்படுகிறது-என்று ஆங்கிலத்தில் தொகுப்பாளர் அறிவித்துக்கொண்டிருக்க,இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதையும் சொல்ல,அங்கிருந்த ஐவருமே ஒரு சேர இப்போது டிவியை பார்க்க...எல்லாருக்குமே அதிர்ச்சி தான்..

முதலில் தெளிந்த மிருதுளா,”மாமா..இவங்க..”என்ற போதே,

“எதுவும் பேச வேண்டாமே!”என்பது போல தன் இடது கையை அவள் பக்கம் காட்ட,வருத்தத்துடன் அமர்ந்துவிட்டாள்.எப்போதும் நடப்பது தானே!!  

வெங்கி பெருமூச்சுவிட்டு,”எவ்வளவு தான் வாழ்க்கையில பணம்,புகழ் வந்தாலும்,பட்ட கறையை துடைச்சு எறிஞ்சுட முடியாது.பலருக்கு இது தெரியறதில்ல,சிலருக்கு அது புரியறதில்ல”-அருணை பார்த்துக்கொண்டே சொன்னவர்,

“பேப்பர்ஸ் எல்லாம் ரெடி பண்ணி கொடு பேரா,கையெழுத்து போட்டுடறேன்..கொஞ்சம் பணம் என் அக்கவுன்ட்-க்கு மாத்திடு..இருந்த எல்லாத்தையும் உனக்கே கொடுத்திட்டனே..அதான் கேட்கறேன்”-வேண்டுமென்றே அருணை வெறுப்பெற்றிவிட்டு,அவனது பதிலை எதிர்பாராமல் எழுந்து சென்றுவிட,தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்..

மிருதுளா தான் அவன் தோள் தொட்டு சமாதானப்படுத்தினாள்.

“விடு மாமா,தாத்தாவுக்கு வயசாகிடுச்சு இல்ல.அதான் இப்படி பேசறார்..நம்ம பேருக்கு கம்பெனி ரன் பண்ற பவர் தான் கொடுத்திருக்கார்.மத்தபடி எல்லாம் இவர் வச்சுது தானே சட்டம்! அதனால ரொம்ப ஓவரா சீன் போடாம,சாப்பிட வா”கைபிடித்து இழுத்தாள்.

மறுக்க முடியாமல் பின்னே சென்றவனுக்கு,எப்படித்தான் முகம் கடுக்க பேசினாலும்,தான் வருத்தமடைந்தால் அது பொறுக்காது உடனே தன்னை சமாதானப்படுத்த முயலும் மிருதுளாவின் மேலும்,அவளது பெற்றோரின்  மேலும் அன்பும்,கோபமும் ஒரே நேரத்தில் எழுந்தது என்பது தான் விசித்திரமானது!! 

“என் பொண்ணை நீ ஏன் இப்படி ட்ரீட் பண்ற”என்று ஒருமுறை கூட மிருதுளாவின் பெற்றோர் கேட்டதேயில்லை.

என்னவோ திட்டுவது இவன் உரிமை,அமைதியாய் வசவுகளை பெற்றுக்கொள்வது தன் பெண்ணின் கடமை என்பது போலவே தான் அவர்கள் நடந்துகொண்டார்கள்..

மருமகனுக்கு உணவை பரிமாறிய மகளை அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை.அருணும் தன் பங்கிற்கு மிருதுளாவிற்கு உணவை எடுத்து வைக்க,உணவை முடித்ததும்,கருமமே கண்ணாய் இருவருமே அந்த இடத்தை சுத்தம் செய்து,பாத்திரங்களை எடுத்து வைக்கும் வரையிலும் வேலைக்காரர்கள் அப்பக்கம் வரவேயில்லை.

அருண் தன் வீட்டிற்கு செல்வதற்கு கிளம்பும் சமயம்,“மாமா,நாளைக்கு பலராமன் கடை திறப்பு விழா.நாம ரெண்டு பேருமே வரணும்னு ரொம்ப ரிக்வஸ்ட் பண்ணி கேட்டார்.நானும் வரேன்னு சொல்லிட்டேன்.உனக்கு வேற எதுவும் ப்ரோக்ராம் இருக்கா?”என கேட்க,

“ப்ரோக்ராம் எதுவும் இல்லை மிரு.நானும் வரேன்.ஆனால் ரொம்ப நேரம் இருக்க முடியாது.சந்தோஷ்-கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு நீயும் என் கூடவே வந்துடு.மில் பக்கம் போயாகனும்.ரொம்ப நஷ்டத்தில ஓடிட்டு இருக்கு.இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்..”என்றவன்,

“ரொம்ப டயர்டா இருக்கு.நான் கிளம்பறேன்”என்றான்.

“எதுவும் பிரச்சனையா மாமா”

தன் முகத்தை பார்த்தே விஷயத்தை தெரிந்துகொள்ளும் மிருதுளாவிடம் எதையும் மறைக்கும் எண்ணமில்லாமல்,”ப்ரத்யாவை யோகா கிளாஸ்ல பார்த்தேன்”என்றான்..

“ஓ!!.....பேசலையா ரெண்டு பேரும்?”தயக்கத்துடனையே கேட்க,

“இல்ல...அவளை பார்த்ததுமே,என்னை விட அவ டென்ஷன் ஆகிட்டா,அதான் அங்க இருக்கவே மனசில்ல,பிளைட் பிடிச்சு உடனே இங்க வந்துட்டேன்”என்றான் கவலையாய்!!

அவனது கவலையை போக்கியே ஆக வேண்டுமென்று மிருதுளாவிற்கு தோன்றியது..

அதனாலையே அருணின் நண்பன் சந்தோஷை பற்றி பேச்சை எடுத்தாள்.

“சந்தோஷ் வீட்டுல ரொம்ப பிரச்சனை பண்றாங்க போல மாமா”என்றதும் ஒன்றும் சொல்லாமல் மென்னகை புரிந்தான்.

சந்தோஷ்-அருண் இருவரின் குடும்பமுமே தொழிலில் போட்டியாளர்கள் என்பதால்,போன தலைமுறை ஆட்கள் எல்லோருமே எதிரிகளாகத்தான் சுற்றினார்கள்..அடிக்கடி சண்டை வரும்..கேஸ் நடக்கும்,வேண்டுமென்ற இருதரப்புமே வழக்கை பல வருஷம் வாய்தா கொடுத்தே இழுத்தடிப்பார்கள். இரு குடும்பத்தார்கள் இடையில் அவ்வளவு வன்மம்!

ஆனால் அருணும் சந்தோஷும் சிறுவயதிலிருந்தே ஒன்றாய் படித்ததினால் நட்பாகிவிட்டனர்.இப்போதும் பரம்பரை தொழிலில் போட்டியாளர்கள் தான்.

ஆனால் நண்பர்கள் ஒன்றாய் இணைந்து நடத்தும் பிசினஸ் கன்சல்டிங் கம்பெனியில் இருவருக்கும் சண்டை என்பது வந்தது கிடையாது..இருவரும் தனியாய் தொழில் தொடங்கப்போகிறோம் என்ற போது இரு குடும்பத்திலும் பயங்கற எதிரிப்பு!எல்லாவற்றையும் சமாளித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.இவர்களால் லாபம் அடைந்தவர்கள் பலர்!!!

பிசினெஸ் கன்சல்டிங் என்றால்,ஒரே வேலையோடு இவர்கள் நிறுத்திக்கொள்வதில்லை.தங்கள் வாடிக்கையாளர்கள் தொழில் தொடங்குவதற்கு பணமுதலிடு செய்ய பேங்கில் லோன் வாங்கி கொடுப்பதில் இருந்து,எங்கு எப்போது தொடங்க வேண்டும்,யாரிடம் பொருட்கள் வாங்க வேண்டும்..எங்கே சந்தைப்படுத்த வேண்டும் என்று ஆதி முதல் அந்தம் வரை முடிவு செய்வது இவர்களின் கம்பெனியின் பொறுப்பு!!

முதல் ஐந்து வருடத்திற்கு அனைத்துமே இவர்களின் கண்காணிப்பில் தான் இருக்கும்.தொழிலில் வருகின்ற லாபத்தில் 25சதவீதம் இவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும்..கொடுக்கலைன்னா இவங்களே எடுத்துக்குவாங்க.கறார் பாய்ஸ்!!

இந்த தொழில் செய்ய தான் உதவுவோம் என்று எந்த பாலிசியும் இவர்கள் வைத்துக்கொள்வதில்லை.நியாயமான தொழிலுக்கு,கொஞ்சம் முதலீடோடு ஆர்வத்தோடும் வந்தால் அனைத்தையும் பக்காவாக செட் பண்ணி கொடுப்பார்கள் என்பதால் இதுவரை எவருமே நஷ்டப்பட்டது கிடையாது...

பிரத்யா சென்ற யோகா வகுப்பை நடத்துபவரும் அருணின் கிளையன்ட் தான்.அதனாலையே அவனும் வந்திருந்தான்.அங்கு எதிர்பாராமல் ப்ரத்யாவை பார்த்ததிலிருந்து அருணின் மனம் மகிழ்ச்சி,துக்கம்,பிரிவு கொடுத்த ஏக்கம் என்ற கலவையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறது.

உறவென்று சொல்ல ஓராயிரம் பேர் இருந்தாலும்,ஆணுக்கும் பெண்ணுக்கும் இன்றியமையாத துணை என்றால் வாழ்க்கை துணை மட்டுமே!! அவர்களிடம் கிடைக்கும் நிம்மதி,சந்தோஷம் வேறு எவரிடமுமே நிரந்தரமாய் கிடைக்காது..அற்ப சுகங்கள் எல்லாமே கானல் நீர் தான்.

அருணிற்கும் இப்போது ஓர் துணை தேவைப்பட்டது...அதே நேரத்தில் இன்னமும் தன்னையே பார்த்துக்கொண்டு வாயிலிலையே நிற்கும் மிருதுளாவால் அவனது மனம் சமன்படவேயில்லை..தனக்காய் இத்தனை வருடமாய் காத்திருக்கும் அவள் மேல் பரிதாபம்,கோபம் ஏற்பட்டதே தவிர காதல் உணர்வு வரவேயில்லை..

விடுவிடுவென்று தன் வீட்டுக்குள் சென்று கதவை அடைத்தவனுக்கு தாத்தாவின் மேல் செமையாக கோபம் வந்தது.அவரால் தான்,அவரால் தான் எல்லாமே சிக்கலாகிப்போனது..எல்லாமே..எல்லாமே சில நாட்களில் சரியாகி விடும் என்ற நம்பிக்கை இருந்தாலும்,முடிவென்று வரும் போது மிருதுளாவின் மனம் என்ன பாடுபடும்-இந்த நினைப்பும் அவனது வேதனையை அதிகப்படுத்த கண்களை மூடிக்கொண்டான்.

இப்போது இன்னும் ஓர் கவலை சேர்ந்துகொண்டது தான் மிச்சம்..பிரத்யுக்ஷாவும் கண்ணுக்குள் வந்து,’நானும் இருக்கிறேன்’என்று சொல்லிவிட்டு போனாள்...

இந்த பெண்கள் ஏன் இப்படி பிரச்சனையின் பிறப்படமாக இருக்கிறார்கள்?-அருணிற்கு மட்டுமல்ல,எனக்கும் இதே கேள்வி தான்! பதில் தான் தெரியவில்லை.




என்னவோ மயக்கம்-11

1௦

பட்..பட்டென்று தட்டப்படும் கதவின் ஓசையும்...அதை தொடர்ந்த

தம் தன நம் தன தம் தனனம் தன தம்தனனம்,என்ற பாடலும்..பிரத்யாவின் உறக்கத்தை கலைத்தது.

வெகு நேரம் பழைய நினைவில் மூழ்கிக்கொண்டிருந்த ப்ரத்யா விடிந்த பின் தான் உறங்கினாள்.

திடீரென்று பாடல் சத்தமாக ஒலிக்க,படுக்கையில் இருந்த தலையணையை எடுத்து,காதில் இறுக வைத்துக்கொண்டு,விட்ட தூக்கத்தை தொடர முயற்சித்தாள் ப்ரத்யா.ஆனால் முயற்சி வீணாய் போனது தான் மிச்சம்.

ஏனோ இன்று அடிக்கடி கனவில்,மிருதுளா அருணை தாங்கிப் பிடிப்பது போல காட்சி திரும்ப திரும்ப கண்ணுக்குள் ஊர்வலம் போக,போதாக்குறைக்கு,இந்தப் பாட்டு வேறு,பின்னணி இசையாக பாடி அவளை வெறுப்பேற்றிக் கொண்டிருக்க,ஒருக்கட்டத்தில் முடியாமல் எழுந்து அமர்ந்தேவிட்டாள்.

பாட்டு சத்தம் வரும் திசையை பார்க்க,டிவியை போட்டுவிட்டு அருகில் நின்றிருந்தாள் ஆறு வயது ஸ்ரீஷா.ரவீந்தர்-இந்துவின் செல்ல புதல்வி.

பிரத்யாவின் எரிச்சல் எல்லாம் பறந்து,”என்னடா ஸ்ரீ,அதுக்குள்ள எழுந்தாச்சா”கேட்டபடியே எழுந்துகொள்ள,அவளது இரவு உடையை பார்த்த ஸ்ரீஷா..

“சித்தி,நீ இந்த மாதிரி ட்ரெஸ் போடக் கூடாதுன்னு அத்தை எத்தன வாட்டி சொல்லியிருக்கா..நீ கேட்கவே மாட்டியா”பெரிய பெண்ணாய்,இடுப்பில் கை வைத்து முறைத்து கேட்க,

“அத்தை சொல்லியிருக்கா இல்ல,சொல்லியிருக்காங்க-ன்னு சொல்லணும்.புரியுதா குட்டி”-தன் முடியை வாரிக்கொண்டே கேட்டவள்,அவளை தூக்க வர,

“கை வாஷ் பண்ணாம கிட்ட வராதே சித்தி”என்றபடி பின்னே நகர்ந்துகொண்டே போனது இந்த சின்ன சிட்டு.அவ்வளவு சுத்தம்.

“சரி,சரி,உன் பக்கமே வரலை.நைட் ட்ரெஸ் என் ரூம்ல தானே போடறேன்.அதனால உன் அத்தை திட்ட மாட்டாங்க.வெளில வரும் போது,சித்தி எப்படி வர்றேன் பார்..இப்போ குளிச்சிட்டு வர்றேன்.நீ போய் சாப்பிடு.நேரமாச்சு”

“பரவால்ல,நீயும் வா”தலையணையை மடியில் எடுத்து வைத்து அதன் மேல் பென்சிலால் கிறுக்க ஆரம்பித்துவிடவும்,அப்படியே அள்ளி எடுத்து கொஞ்ச சொன்ன மனதை,அடக்கி குளிக்க சென்றாள்.

இவளும் மதுவும் நேற்று இரவு தான் ரவீந்தரின் வீட்டிற்கு வந்திருந்தனர்..மதுவிற்கு தனியறை கொடுத்துவிட்டார்கள்.ப்ரத்யா மதுவோடு தங்க ஆசைப்பட,அவளது பெரியம்மா கங்கா ஒரே பார்வையில் அடக்கிவிட்டார்.

தனியாய் படுப்பது புதிதில்லை என்றாலும் இரவெல்லாம் சரியாய் உறக்கமேயில்லாமல் கனவுகளோடு போராட வேண்டியிருந்தது.கண்ணை மூடினாலே அருண் தான் வந்து போனான்.

எப்போதையும் விட அலைப்புருதல் அதிகமாய் இருக்க,அதுவேறு பயம் கொடுத்தது.

போன முறை நடந்தது போல,இம்முறையும் எதுவும் நடந்துவிடுமோ என்ற யோசனையிலையே குளித்துவிட்டு,கங்கா பெரியம்மாவிற்கு பிடித்தது போல சந்தன நிறத்தில் சேலை அணிந்து,அதற்கு மேட்சாக காது,கை,கழுத்தில் அணிகலன் அணிந்து படுக்கையறை கதவை திறந்து உள்ளே வர,இன்னமும் அந்த தலையணையில் தான் ஸ்ரீஷா கவனமாய் இருந்தாள்.

“ஸ்ரீ குட்டி,போகலாமா”கேட்டதும்,நிமிர்ந்து பார்த்தவள்,

அழகாய் சிரித்துவிட்டு,”போலாமே”என்றபடி தலையணையை அதனிடத்தில் வைத்துவிட்டு,சித்தியின் கையை பிடித்தபடியே நடக்க,தூக்கிக்கொண்டாள் குட்டி தேவதையை!

உணவருந்தும் மேசையிலிருந்து,இவர்களின் வரவை பார்த்த கங்கா,இந்துவை பார்க்க அவளோ கடிகாரத்தை தான் பார்த்தாள்.

இவர்களை புரியாத புதிராய் பார்த்துக்கொண்டிருந்த மது அப்போது தான் உண்டு முடித்திருந்தாள்.

“9 மணிக்கு மேல சாப்பாடு கிடையாது.எங்க வீட்டு ரூல்ஸ்”என்று கட்டாயப்படுத்தி உண்ண வைத்திருந்தாள் இந்து.

இந்தரும் உண்டு முடித்தவன்,இவர்களுக்காய் காத்திருக்க,அவனுக்கு அடுத்த இருக்கையில் ஸ்ரீஷாவும்,அடுத்து பிரத்யாவும் அமர்ந்துவிட,

“ம்மீ பசிக்குது”தட்டை எடுத்து சப்தம் கொடுத்தும்,இந்து எதையும் எடுத்து வைக்காமல் இருக்க,

“என்ன எங்காவது ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுடுங்க.இங்க ஒரே ரூல்ஸா இருக்கு”-அவளது வயதுக்கு மீறிய பேச்சில், சிரிப்பு வந்தாலும்,அதை அடக்கிக்கொண்ட கங்கா,

“லேட்டா வந்தா,அவங்களே ஏதாவது செஞ்சு சாப்பிட்டுக்கணும்.போ! ஏதாவது ஸ்நேக்ஸ் எடுத்து சாப்பிடு”-அநியாயத்திற்கு விரட்டினார்.

“ம்மா.பசிக்குது.ப்ளீஸ்”கண்ணை சுருக்கி பிரத்யாவும் கேட்க,அவளுக்கும் இதே பதில் தான் வந்தது.

இந்து,”நான் தனியா சமைச்சுக் கொடுக்கறேன் வாங்க”என அழைக்க,

“நீ உட்கார் இந்து”அதட்டிய கங்காவை மீறி இந்துவால் செல்ல முடியவில்லை.

பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்தாள்.அடுத்து என்ன நடக்கும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

இந்தர் எழுந்தவன்,”வாங்க,கிட்சன்க்கு போகலாம்”என்று சொன்ன உடனையே பிரத்யாவும்,ஸ்ரீஷாவும் யாரையும் கண்டுகொள்ளாமல் ஓடினர்.

“அக்கா”-மது இந்துவின் கையை சொரிய,

கங்காவை கண்டுகொள்ளாமல்,”இதுங்க இப்படித்தான் பாசப்பயிரை வளர்க்கும்-ங்க.நீயும் கண்டுக்காதே.ரெஸ்ட் எடுக்கறியா.இல்ல எங்காவது வெளில போகலாமா”கேட்க,

“ப்ரத்யா வரட்டும்-க்கா”முடிவாய் சொல்லிவிட்டு வீட்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

திடீரென்று விசில் சத்தமும்,”வாவ்வ்வவ்வ்வ்வ்!”என்ற பேரிரைச்சல் கேட்டு,யாரென்று பார்க்க,மதுவால் கண்ணெடுக்கவே முடியவில்லை.

அவள் பார்வையில் முதலில் விழுந்தது அந்த நெடிய ஆணின் தலை தான்.மொத்த மண்டையும் வழிக்கப்பட்டு,நடுவில் மட்டும் குடுமி வைத்திருந்தான்.சுத்தமாகவே மதுவிற்கு பிடிக்கவில்லை.

காதில் வளையம்,கையில் பெரிய பிரேஸ்லெட் என்று ரொம்பவே வித்தியாசமான சகிக்காத தோற்றம்.அதற்கு மேல் பார்க்க முடியாமல் முகசுழிப்புடன் திரும்பி கொண்டாள்.

அதை கவனிக்காத இந்து,”உஷ்ஷ்ஷ்.மாமா உள்ள தான் இருக்கார் ஜீவா.முதல்ல போய் உருப்படியா ட்ரெஸ் பண்ணிட்டு வா.பிரத்யாவும் வந்திருக்கா..இது அவ பிரண்ட் மது”அறிமுகப்படுத்தி வைக்க,

“நமஸ்தே ஜி!”என்றவன்,அவளுக்கு கை கொடுத்து வாங்கிக்கட்டிக்க மனமில்லாமல் அவசரமாக தனதறைக்கு ஓடினான். எப்போதும் சோம்பேறித்தனமாய் படுக்கையில் விழுபவன்,இன்று உடனடியாய் சென்று,தலையில் மிச்சமிருந்த முடியையும் அவனே மழித்து,அவசரமாய் குளியல் போட்டுவிட்டு,நீட்டாக கீழே வந்தான்.

இந்துவுக்கே ஆச்சர்யம் தான்.அதை விட கங்காவிற்கு!! அவரால் அடக்க முடியாத,அல்லது அடக்க விரும்பாத ஒரு ஆள் என்றால் அது இந்த ஜீவா தான்.இந்துவின் விருப்பத்திற்காக தான் இங்கு இருக்க சம்மதித்தார் என்றாலும்,அவனின் அடாவடி செயல்கள் அவரை கோபப்பட வைக்கும் போது,இந்தரிடம் சொல்லி அடக்கி வைக்க சொல்லிவிடுவார்.நேரடியாய் பேசும் அளவிற்கு அவன் தங்களுக்கு சமதையானவன் இல்லை என்ற எண்ணம் இவருக்கு நிறையவே இருந்தது.

ஜீவா மற்றவர்களின் பார்வையை எல்லாம் புறந்தள்ளிவிட்டு,தன் கையோடு கொண்டுவந்திருந்த பேகிலிருந்து,ப்ரெட் பாக்கெட் எடுத்தவன்,ஜாம் எடுத்து போட்டு,காரியமே கண்ணாய் உண்ண ஆரம்பித்துவிட்டான்.கடைக்கண் மட்டும் மதுவின் மேலிருந்தது!

‘இதென்ன பார்வை’-கடுப்புடன் கிட்சனையே பார்க்க,அங்கிருந்த மூவரும் அவர்களது தட்டில் ப்ரெட் சாண்ட்விச் எடுத்துக்கொண்டு வந்தவர்கள்,அவர்களது இடத்தில் மீண்டும் அமரும் போது தான்,ஜீவாவை பார்த்தனர்.

பிரத்யாவை நிமிர்ந்து பார்த்தவன்,”ஹாய்”என்றதோடு குனிந்துகொண்டான்.பதிலை எதிர்பார்க்கவில்லை.அவளும் சொல்லவில்லை.

அது என்னவோ,இவனை சிறுவயதில் ஒரே ஒருமுறை கங்கா மிரட்டினார்.

“என் பொண்ணை பார்த்த,கண்ணை தோண்டிடுவேன்”கோபமாய் சொன்னது இவனது மனதில் அப்படியே அச்சாரமாய் பதிந்துவிட்டது.அப்போது இந்து மட்டும் ஒருதலைக்காதலில் இந்தர் பின்னே சுற்றிக்கொண்டிருந்தாள்.

ஒவ்வொருமுறையும் இந்தர் நிராகரிப்பதை,தம்பியிடம் இந்து சொல்லும் போதெல்லாம்,குறுக்கே நிற்கும் ப்ரத்யாவை மயக்கி,தன் பின்னே சுற்ற வைக்க வேண்டும் என்ற மோசமான எண்ணம் எல்லாம் தோன்றும்.ஆனாலும் அக்கா இந்தரை திருமணம் செய்துகொண்டால்,இவள் தனக்கு தங்கை முறையாக வேண்டும் என்று மனதில் பதித்து வைத்துக்கொண்டு அமைதி காத்தான்.

இவனுக்கு கோபம் நிறையவே வரும்.அதுபோன்ற சமயங்களில் படுவில்லத்தனமாய் யோசிப்பான்.மற்ற நேரங்களில் ஐயா செம சைலன்ட் ரகம்! பெண்களை பார்த்தால் கொஞ்சமென்ன ரொம்பவே ரசிக்கும் ரகம்..கிளுகிளுப்புக்காக சொல்லனும்னா ரொம்ப ஜொள்ளு விடுவான்.

இப்போதும் மதுவை அப்படித்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.சம்பந்தப்பட்ட அந்த இருவரை தவிர வேறு யாருமே உணர முடியாத பார்வை!

உண்டு முடித்த கையோடு வெளியே வந்தவன்,செயற்கை நீரூற்று அருகில் வந்தவன்,அதில் கல்லை வீசிக்கொண்டே அமைதியாய் இருக்க,அவன் எதற்காய் காத்திருந்தானோ,அவளே வந்தாள்..

மது..அவனை பார்த்த உடனே கவந்துவிட்டாள் என்றெல்லாம் சொல்ல முடியாது.ஆனால் அவளிடம் ஏதாவது பேசிவிட வேண்டுமென்று மனம் உந்தியது.எதையாவது உளறிக்கொட்ட வேண்டும் போலிருந்தது..

முடியில்லாத மண்டையை தட்டிக்கொண்டே அவள் அருகில் வந்தவன்,அவள் திகைத்த பார்வையை உணர்ந்து,”எனக்கு ஒரே ஒரு ஆசைங்க.யாராவது ஒரு பொண்ணு,எனக்கு ஐ லவ் யூ சொல்லணும்னு”

“...........”

“ஆனால் அந்த ஆசை நிறைவேறவேயில்லை.நான் தான் நிறைய பேருக்கு சொல்லியிருக்கேன்..இப்போ எனக்கு நீங்க ஒரே ஒரு முறை,என்னை காதலிக்கிறேன்னு சொல்லணும்னு ரொம்ப ஆசையா இருக்குங்க..ஆனால் நான் கொஞ்சம் ஷை டைப்பா..அதான் இதையெல்லாம் மனசு விட்டு சொல்ல முடியலங்க.என் தவிப்பு உங்களுக்கு புரியுதுதான-ங்க”என்று நிஜமாகவே உளறித்தான் கொட்டினான் ஜீவா.

வலுக்கட்டாயமாய் உதட்டை இழுத்து வைத்து,”ஸோ நீங்க ரொம்ப ஸ்மார்ட்-ன்னு நான் இப்போ நினைக்கணுமா,ம்ம்ம்ம்?”-மது கேட்க,

“ஐயோ அப்படியெல்லாம் இல்லீங்க.எனக்கு நிஜமாவே நீங்க அப்படி சொன்னா நல்லா இருக்கும்னு தோணுச்சுங்க.உங்களுக்கு பிடிக்கலைன்னா பரவாயில்லீங்க.நாளைக்கு பிடிச்ச பின்னாடி சொல்லுங்க,சரியா?”-அவள் கோபப்படுவதை உணராதது மாதிரியே பேசிவிட்டு சொல்ல,மதுவிற்கு எந்த உணர்வுமே தோன்றவில்லை.

அவளுக்கு தோன்றினால் தான் அதிசயம்.

காதல் என்றால் என்ன?

அதன் மூலம் கிடைக்கும் சந்தோஷம் தான் என்ன?

திகட்ட திகட்ட காதலித்து திருமணம் செய்துகொண்டாலும்,அதன் பின்னர் திருமண வாழ்க்கை இனித்துவிடுகிறதா?

போராடி போராடி கிடைக்கும் இந்த பொல்லா காதலில் ஏற்படும் வலியும் சுகமும் உணர்த்தும் பாடம் தான் என்ன?

அதைவிட இம்மானுட பிறப்பின் அர்த்தம் தான் என்ன? பிறந்து வளர்ந்து கட்டாயமாய் காதலுக்கு உட்பட்டு பிள்ளைகள் பெற்று..இடையில் பணம் பதவி அந்தஸ்து போன்றவைகளுக்காக போராடி இறுதியில் கிடைப்பது என்னவோ மரணம் தான்.இது தான் வாழ்க்கையில் நிச்சயம்..இதில் இந்த காதலினால் என்ன கிடைத்துவிடப் போகிறது-மதுவிற்கு தோன்றும் ட்ரில்லியன் டாலர் கேள்வி.

யாராவது காதலிக்கிறேன் என்று சொன்னால் உடனே இந்த கேள்விகள் தான் கண் முன்னே வந்து போகும் இவளுக்கு! அவளின் பிறப்பும் வளர்ப்பும்,பட்ட கஷ்டமும்,வாழ்வதற்காய் போராட வேண்டிய சூழ்நிலையும் அவளை சித்தாந்த நிலைக்கே தள்ளியிருந்தது.

ப்ரத்யாவின் காதல் தான் அவளை அதிகமாய் குழப்பும்..

எதுக்காக காதலிச்சு,இப்படி பிரிஞ்சு போய்,ஒருத்தனுக்காக அழுது புரண்டு ஏங்கி காத்துக்கிடக்கா?-அன்புக்காக தானோ?..அது தான் போட்டி போட்டுக்கொண்டு அன்பை காட்ட பெரியம்மாவும்,இந்தரும் இருக்கிறார்களே!! பிறகேன் பாசம் காட்ட ஆளே இல்லாதது போல ஒருவனையே பிடித்து தொங்கிகொண்டிருக்க வேண்டும்?-இப்படியெல்லாம் பல விதமாய் தோழியின் வாழ்க்கை முறையை பற்றி சிந்தித்தாலும் ஒருமுறை கூட கேட்டதில்லை.

எதில் இவளுக்கு குழப்பமோ இல்லையோ,ஒருவரின் தனிப்பட்ட அந்தரக்கத்தில், சில உணர்வுகளில்,உரிமையில்...அடுத்தவர் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் உள்நுழையக் கூடாதென்பதில் மட்டும் தெளிவாய் இருந்தாள்.(அந்த மட்டும் சிறப்பு!!!!!)

தோழியை பற்றிய நினைப்பிலையே ஜீவாவை மறந்துவிட்டாள்.பிரத்யாவும் வெளியே வர,அவள் கையிலிருந்த ஸ்ரீஷா,”ஆண்ட்டி,என் கூட யோகா க்ளாஸ்க்கு வரீங்களா.சித்தி நீங்க வந்தா தான்,என் கூட வருவேன்னு சொல்லிட்டாங்க”-அழகு தமிழில் நிறுத்தி நிதானமாய் பேசும் அழகில் சொக்கித்தான் போனாள் மது.

“கண்டிப்பா வரேன்டி செல்லம்”கன்னத்தை பிடித்து கொஞ்ச,

“அப்போ உடனே போகலாமா?”ஆர்வத்தை அடக்காமல் கேட்க,சம்மதித்துவிட்ட இருவரும் உடனே புறப்பட்டார்கள்.

ஆறு வயசு பொண்ணுக்கு யோகா அவசியமா?-கேள்வி தோன்றினாலும்,பிரபலமாகி வரும் அந்த யோகா வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று ப்ரத்யா நினைத்தாள்.ஓயாமல் தன்னை தின்னும் காதல் உணர்வை,தியானத்தின் மூலமாய் ஆத்ம உறவாய் மாற்ற எண்ணினாள்.

யோகா வகுப்பிற்கு இவர்கள் செல்லும் முன்,அங்கிருந்த காவலாளி,”குருஜியோட உரை அங்க நடந்துட்டு இருக்கு.போங்கம்மா”என்று சொல்ல மூவரும் அங்கு சென்று,காலியாய் இருந்த கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள்.

இவர்கள் வரும் முன்னேயே குருஜியின் உரை தொடங்கி பாதி முடிந்திருந்தது.

கம்பீரமான வசீகரிக்கும்,மனதிற்கு இதமளிக்கும் குரலில் பேசிக்கொண்டிருந்தார்.

நீயே உனக்கு என்றும் நிகரானவன்-பழைய படத்தில் இந்த பாடல் வரியை நீங்கள் கேட்டிருக்கலாம்.எத்தனை சத்தியமான வார்த்தை.இந்த உலகத்தில் உங்களின் உருவத்தை ஒத்த எத்தனையோ பேரை அறிவியல் முறையில் உருவாக்கலாம்.ஆனால் எண்ணங்கள் ஒன்று போல் இருக்குமா?

ஒரே ஒருவம் கொண்ட இருவரும் ஒரே நேரத்தில் ஒத்த சிந்தனையுள்ளவராய் இருந்திருக்கிறார்களா?

இல்லை வேறு உருவத்தில் இருப்பவர்கள் தான் ஒத்த சிந்தனையில் இருந்திருக்கிறார்களா?

மிகவும் அரிதாய் எப்போதோ ஒரு நேரத்தில் மட்டும் இந்த ஒத்த சிந்தனை சாத்தியமாகும்.மற்ற நேரங்களில் முடியாது தானே!

அப்படியிருக்கும் போது நீங்களே ஏன் உங்களை இன்னொருவருடன் ஒப்பிட்டுக் கொள்கிறீர்கள்?

எதை வைத்து உங்களை விட இன்னொருவன் உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்று முடிவு செய்கிறீர்கள்..?

வயது,படிப்பு,பணம்,அனுபவம்,திறமை,வீரம்-இவற்றை வைத்து தானா..இவைகள் எப்படி அளவுகோலாயின?-எல்லாம் பித்துப்பிடித்த மனதின் செல்லரிப்புகளின் விளைவு?

அப்படியெனில் நாம் முன்னேறுவதற்கு யாருடன் தான் நம்மை ஒப்பீட்டுக் கொள்வது என்று தோன்றுகிறதல்லவ்வா?

ஒப்பிட்டு கொள்ளவும் ஒருவர் இவ்வுலகத்தில் இருக்கிறார் என்றால்,அது நீங்கள்...நீங்கள் மட்டும் தான்-நீ தான் என்றும் உனக்கு நிகரானவன்,இன்னொருவன் அல்ல..ஏனெனில் நேற்று நீ போட்டி போட்ட ஒருவன் நாளை எப்படி இருப்பான் என்பது யாருக்குமே தெரியாது. உன்னை தவிர மற்ற எல்லாமே மாயை தான்..நீங்கள் தான் நிஜம்.

இதை புரிந்துகொண்டால் ஆசை,காமம்,வன்மம்,பொறாமை எல்லாம் நீர்த்துப் போய் மனதில் அமைதி பிறக்கும்.அன்றைய பொழுதின் ஒவ்வொரு செயலுக்கும் காரணகர்த்தா நாம் தான் என்று விளங்கும்.மனமகிழ்ச்சியும் கிடைக்கும்..

ஆகவே நண்பர்களே..என்று பேசிக்கொண்டிருக்கும் போதே,பிரத்யாவின் கவனம் அவளையும் அறியாமல் மேடைக்கு இடது புறமிருந்த அறைப்பக்கம் செல்ல,கையில் சில காகிதங்களை படித்தபடி வந்தான் அருண்...

திடீரென்று இன்ப படபடப்பு இவளுள்! எல்லாம் சில நொடிகள் தான்.உடனே சுதாரித்துக்கொண்டாள்.

அதற்குள் குருஜிக்கு அடுத்தபடியாக இன்னொரு ஆசாமி பேச வர,அதை காது கொடுத்து கேட்கவேல்லாம் அவளுக்கு பொறுமையே இல்லை.

“போகலாம் மது”

“இருப்பா.நல்லா பேசறாங்க”-ஆசாமியின் பேச்சில் முழுவதுமாய் மூழ்கி போய்விட்டாள் என்பது இதிலிருந்தே தெரிந்திருக்கும் அல்லவா!

பல்லை நறநறவென்று கடித்தவள்,”இப்போ நீ வர போறியா,இல்லையா?”காதில் காத்த,வேறு வழியில்லாமல் புறப்பட,ஸ்ரீஷா குட்டி தூங்கியிருந்தாள்.(ஹி ஹீ..நானும் தான் தூங்கிட்டேன்).


காரை எடுக்க பார்க்கிங் பக்கம் செல்ல,இவர்களை தாண்டி சென்ற காரில் அருண் இருந்தான்.அவனும் பார்த்தான்.இவளும் பார்த்தாள் தான்..

பேச வேண்டுமென்று இருவருமே நினைக்கவில்லை..பார்த்த உடன் ஓடி ஒளிந்துகொள்ள தான் இருவருக்குமே தோன்றியது..

இது என்ன காதலோ!!